முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என அவர் விளக்கம் அளித்துள்ளார்!
வெளியுறவுத்துறை அமைச்சராக முந்தைய மோடி அரசில் இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த முறை வயதாகி விட்டதாலும், உடல் நிலை ஒத்துழைக்க வில்லை என்றும் கூறி, போட்டியிடுவதில் இருந்து தவிர்த்தார்.
முந்தைய அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் துடிப்புடன் இருந்தார். அவரது வெளியுறவு அமைச்சகவும், அதிகாரிகளும் டிவிட்டரில் பதிவிடும் புகார்கள், உதவிக் கேட்புகளுக்கு உடனடி பதில் கொடுத்து, உதவி செய்து, உலக அளவில் பிரபலம் ஆனவர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கு உடனுக்குடன் உதவினார். இதனால், உலக அளவில் அதிகம் பேரால் டிவிட்டர் வலைத்தளத்தில் பின்தொடரப்படும் வெளியுறவுத்துறை அமைச்சராக புகழ் பெற்றார்.
தற்போது, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்! இந்நிலையில், ஆந்திரப் பிரதேச ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்படலாம் என பேச்சு எழுந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பேச்சு அடிப்பட்டது. பலரும் இதனைப் பகிர்ந்தார்கள்.
அதற்கு ஏற்ப, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே அதை நீக்கிவிட்டார்.
தற்போது தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் என இரு மாநிலங்களின் ஆளுநராக ஈஎஸ்எல் நரசிம்மன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அதிகாரபூர்வமாக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வருவதற்குள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் அவசரப்பட்டு ட்விட்டரில் பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது!
ஹர்ஷ்வர்த்தனனின் டிவிட்டர் பதிவுக்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த டிவிட்டர் பதிலில், அவர், “நான் ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதாக வரும் செய்தி உண்மை அல்ல” என்று கூறினார். இதை அடுத்து, பலரும் இதை பகிர்ந்துவருகிறார்கள்.
The news about my appointment as Governor of Andhra Pradesh is not true.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 10, 2019
அரசியலில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்குத்தான் ஆளுநர் பதவி அளிக்கப்படும் என்பது பொதுவான கருத்து.