நாகர்கோவிலில் எழுத்தாளர் ஜெயமோஹனைத் தாக்கியது திமுக., நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது.
வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ என்று திமுக., தலைவர் ஸ்டாலின் பேசுவார்! ஆனால் இங்கே ஜெயமோஹன் விவகாரத்தில், அவர் மாவு புளிச்சதுக்காக ஏன் என்று கேட்க, போதையில் கும்மாங்குத்து விட்டிருக்கிறார் திமுக., நிர்வாகி!
முன்னர் பிரியாணி கடை, டீக் கடை இவற்றில் சாப்பிட்டுவிட்டு ஓஸியில் நகர்ந்துவிடப் பார்த்தபோது, காசு கேட்டதுக்காக கும்மாங்குத்து குத்தினார்கள் திமுக.,வினர். பியூட்டி பார்லர் விவகாரத்தில் காசு விவகாரத்தில் ஏறி மிதித்துவிட்டார் திமுக., நிர்வாகி. இங்கே காசு கொடுத்து பொருள் வாங்கி, புளிச்ச மாவை தலையில கட்டுறீங்களே… என்று காசை திருப்பிக் கேட்டதற்காக… கடைக்காரர் போதை தலைக்கேறி அராஜகத்தைக் காட்டியிருக்கிறார்.
திமுக., என்றாலே அராஜகம், அக்கிரமம் மிரட்டல், போதை என்று ஆகிவிட்டதற்கு உதாரணமாக இந்தச் சம்பவம் பட்டியலில் ஏறியிருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்! காரணம், எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் தி.மு.க நிர்வாகி! அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப் பட, அவருக்கு ஆதரவாக தி.மு.க நகரச் செயலாளர் காவல் நிலையத்துக்குச் சென்று பேசி கட்சியின் மானம் காத்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் சாரதா நகரில் வசித்து வருகிறார். இவரது வீடு அருகே உள்ள மளிகைக் கடையில் நேற்று இரவு தோசைமாவு பாக்கெட் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டில் சென்று தோசை சுட்டபோது மிகவும் புளிப்புச் சுவையுடன் இருந்துள்ளது.
அதன் பிறகு தான் மாவு கெட்டுப் போனது தெரிந்துள்ளது. அந்த மாவு பாக்கெட்டில் ஒரு நாளைக்கு முந்தைய தேதி போடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார் ஜெயமோகன். எனவே, அந்த மாவு பாக்கெட்டை அப்படியே எடுத்துக்கொண்டு மளிகைக் கடைக்குச் சென்று, கடையில் இருந்த கீதா என்பவரிடம் மாவு கெட்டுப்போனது குறித்துக் கூறியுள்ளார்.
அப்போது அங்கே நின்ற கீதாவின் கணவர் செல்வம் கோபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியுள்ளார். ஆனால், தான் தாக்கப் பட்ட பின்னர் எதையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றுள்ளார் ஜெயமோகன். ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற கடைக்காரர் செல்வம் ஜெயமோகனின் வீட்டுக்கே சென்று மோசமான வார்த்தைகளால் வசை பாடியுள்ளார்.
அப்போதுதான் ஜெயமோகனின் குடும்பத்தாருக்கு ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதன் பின்னர், ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து இரவே கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டார்.
செல்வம் திமுக-வின் 17-வது வட்ட பிரதிநிதி என்பதும், செல்வத்துக்கு ஆதரவாக நாகர்கோவில் நகர தி.மு.க செயலாளர் மகேஷ் நேசமணி நகர் காவல் நிலையத்துக்குச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
மளிகைக் கடைக்காரருக்கு ஆதரவாக தி.மு.க பிரமுகர் சென்றதைத்தான் ஜெயமோகன் தனது வலைதளத்தில் அரசியல் தலையீடு எனக் குறிப்பிட்டுள்ளார்.
தான் தாக்கப்பட்டது குறித்து ஜெயமோஹன் தன் வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது…
இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரியகுடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை.
என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன .
வழக்கு பதிவு செய்யப்படும் என நினைக்கிறேன். நீதி கிடைக்குமென்றும்.
- ஜெயமோஹன்