மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. அப்போது, மக்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் இன்று மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தது.
சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக எம்பி ஓம் பிர்லா (வயது 57) தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் முன்மொழிந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை வரை எதிர்க்கட்சிகளின் சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. ஓம் பிர்லாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன. எனவே, ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, புதிய அவைத் தலைவரை வாழ்த்தி பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்ப்பது! அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். பிர்லா சிறப்பாக செயல்படுவார்! அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்” என்று கூறினார்.
Speaking in the Lok Sabha. Watch. https://t.co/mJlCQiaIPk
— Narendra Modi (@narendramodi) June 19, 2019
.