ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த லாட்டரியில் கொல்லத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னா நாயர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன் அபுதாபியில் வசித்து வருகிறார்.
அபுதாபியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், அண்மையில் ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அதற்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.22 கோடி. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வப்னா இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்!
இதுகுறித்து அவர் கூறிய போது ‘’நான் எப்போதும் லாட்டரி சீட்டு வாங்க மாட்டேன். இதுவரை மொத்தமே மூன்று அல்லது நான்கு முறைதான் வாங்கியிருப்பேன். இப்போதுகூட நான் லாட்டரிச் சீட்டு வாங்கியதையே மறந்து விட்டேன். இது குறித்து நான் என் கணவரிடம் கூட அதைத் தெரிவிக்கவில்லை! ஆனால் பரிசு விழுந்ததை அறிந்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தேன். என் கணவரிடம் தெரிவித்ததும் அவருக்கும் அது இன்ப அதிர்ச்சிதான்! என்று கூறினார்.
இந்தப் பரிசுப் பணத்தை வைத்து என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ’’பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு! அதற்காக இந்தப் பணத்தை பயன்படுத்துவேன்’’ என்றார் அவர்.
தென் மாநிலங்களில், கேரள மாநிலத்தில் தான் இப்போதும் லாட்டரி வாங்குவதும் விற்பனையும் அதிகரித்துக் காணப் படுகிறது என்கிறார்கள். தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு தடை செய்யப் பட்டுள்ளது என்பதால், கேரள மாநிலத்தில் இருந்து லாட்டரிச்சீட்டு கொண்டு வந்து, முறைகேடாக விற்பனை செய்வதும் அங்கங்கே நடந்துவருகிறது.