சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜங்ஜிர்-சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷில்லேக் சிங் வயது 14 . அவரின் பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருகிறார்கள். ஷிவ்லேக் சிங் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஷிவ்லேக் தன் அம்மா லேக்னா சிங், அப்பா ஷிவேந்திர சிங் மற்றும் நவீன் சிங் என்பவருடன் ராய்பூரில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் பிலாஸ்பூரில் இருந்து ராய்பூருக்கு சென்றபோது அவர்களின் காரும் எதிரே வந்த டிரக்கும் மோதியது. இதில் ஷிவ்லேக் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற மூன்று பேரும் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் ஷிவ்லேக் சிங்கின் அம்மா லேக்னாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரக் டிரைவரை தேடி வருகிறார்கள். ஷிவ்லேக் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க ராய்பூருக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அவரின் குடும்ப நண்பரான திரேந்திர குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஷிவ்லேக் சிங் சங்கட்மோச்சன் ஹனுமன், சசுரால் சிமர் கா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவரின் மறைவு செய்தி அறிந்த இந்தி சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.