ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நாளை மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். மேலும், மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
#அத்திவரதர் வைபவம் தற்போது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வருகிறது. ஆக.1 நேற்று முதல், ஸ்ரீ அத்திவரதர் நின்ற திருக் கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். முதல் நாளான நேற்று, பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. எனவே பலரும் பொது தரிசனப் பாதையில் விரைவில் தரிசித்துவிட்டு திரும்பினர்.
அதே போல், வெள்ளிக்கிழமை இன்றும் காலையில் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லை. எனவே ஒரு மணி நேரத்தில் தரிசனம் முடிந்து திரும்பியதாக பலரும் கூறினர்.
இருப்பினும், சயனத்தில் தரிசனம் செய்தவர்கள் மீண்டும் வருவதாகவும், இதுவரை தரிசிக்காதவர்களும் மீண்டும் வருவதாகவும், எல்லாவற்றிற்க்கும் மேலாக வெள்ளி – சனி – ஞாயிறு என வார இறுதி நாட்கள் என்பதாலும் பெருமளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனிடையே, காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நேற்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிலையில், கூட்டத்தைப் பயன்படுத்தி விஐபிக்கள் செல்லும் பாதையில் பட்டா கத்திகளுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதை அடுத்து பாதுகாப்பு மேலும் பலப் படுத்தப் பட்டது.