சிம்ஹாசலம் படிக்கட்டு வழியே சுவாமி தரிசனத்திற்கு சென்ற பெண் மரணம் அடைந்தார். தெய்வ தரிசனத்திற்கு போகும்போது அவரைப் பின்தொடர்ந்த மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்ஹாசலம் ஸ்ரீலட்சுமி வராஹர் ஆலயத்திற்கு புதன்கிழமை சென்றபோது இரு பெண்களுக்கு நடந்த சோகச் சம்பவம் இது. மலைப் பாதையில் படிக்கட்டில் ஏறிய போது, கல் தலை மேல் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டும், இன்னொரு பெண்ணுக்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளதும் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிம்மாசலம் ஆலய படிக்கட்டு பகுதியில் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் மேலிருந்து கற்கள் நழுவி பக்தர்களின் மேல் விழுந்தன. அந்த விபத்தில் இருவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டன. உடன் இருந்த பக்தர்கள் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் மரணம் அடைந்தார். அவர் தலையில் கல் பலமாகத் தாக்கியதால் அப் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பெண்ணின் காலில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண், “சப்பவரம்” என்ற ஊரைச் சேர்ந்த பவானி என்று அடையாளம் காணப் பட்டுள்ளது. தரிசனத்திற்குச் சென்ற பெண் மரணம் அடைந்ததால் சப்பவரம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது .
ஆலய பணியாளர்களின் அலட்சியப் போக்கின் காரணமாகவே பெண் உயிரிழந்தார் என்ற பக்தர்களும் உள்ளூர் வாசிகளும் குற்றம் சாட்டினர். கோயிலில் படிக்கட்டுகளில் மராமத்து பணி நடப்பதாக பக்தர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படியும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.