செய்தி தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டி.வி இணை நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இன்று மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எந்த சட்டப் பிரிவில்அவர்கள் தடுத்து நிறுத்தப் பட்டனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும் பண மோசடி வழக்கில் இருவரையும் தடுத்து வைத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பை விமான நிலைய செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
முன்னணி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய ஊழல் வழக்கு” அடிப்படையில் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தப் பட்டதாகத் தெரியவருகிறது.
அவர்கள் இருவரும் அறிவிக்கப்படாத இடத்துக்கு பயணம் செய்ய இருப்பதாகக் கூறப் பட்டது. மீண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நாடு திரும்ப திட்டமிடப்பட்டதாக என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பிரணாய் ராய்யை தேடுவதாகக் கூறப் பட்டது.
இதனிடையே எடிட்டர்ஸ் கில்ட் இந்த விஷயத்தில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, என்டிடிவி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், இது “அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுதல்” என்று கூறியது.