அடுத்த இரு வாரங்களில் விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் விநாயகர் சிலை தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆர்கே பேட்டை சுற்றுப்பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி கடந்த சில மாதமாக நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் கடந்த 6 மாதமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சிலைகள் முழு வடிவம் பெற்று அவற்றுக்கு வண்ணம் தீட்டி விற்பனைக்காக சாலை ஓரத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர். அவற்றின் தோற்றங்களைக் கண்டு வியக்கும் அன்பர்கள் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்ல முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஆர்கே பேட்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக பொதுமக்கள் பார்வைக்கு வெளியில் வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே தாங்கள் தயாரித்து வைத்த சிலைகளை விநாயகர் சதுர்த்திக்குள் விற்பனை செய்ய முடியுமா என்ற சோகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது!
மேலும் சிலர் உள் அரங்குகளில் சிலைகளை காட்சிக்காக வைத்து விற்பனையை நடத்தி வருகின்றனர். எனவே விநாயகர் சிலைகளின் விலை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது!