மாடலிங் என்ற பெயரால் இளம்பெண்ணுக்கு வலை விரித்து நரபலிக்கு ஏற்பாடு செய்த அதிர்ச்சியான சம்பவம் பலரையும் இப்போது உலுக்கி எடுத்துள்ளது.
சூரிய கிரகண சமயத்தில் நரபலி கொடுத்தால் சனி விலகிப் போகும்… அதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது போன்ற மூடநம்பிக்கைகள், பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் இப்போதும் கூட பலரையும் ஆட்டிப் படைப்பதாகத் தெரிகிறது.
அப்படிப்பட்டவர்கள் என்ன காரியம் செய்தார்கள் தெரியுமா?
22 வயது இளம் பெண். அழகாக இருப்பாள். மாடலிங்கை பணியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். ஆனால் நேபாளில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று எண்ணினாள்.
பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்மணி இந்தப் பெண்ணை சந்தித்தாள். அவளை இந்தியாவுக்கு அழைத்து வந்து போஜ்புரி சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினாள். தான் நடத்தும் மியூசிக் வீடியோவில் மாடலிங் வாய்ப்பு தருவதாகவும் அவளை நம்ப வைத்தாள்.
அவள் கூறிய பசப்பு வார்த்தைகள் அந்த இளம்பெண்ணுக்கு வேதம் போல் தோன்றின. அந்தப் பெண்ணின் பின்னால் இன்னும் ஆறு பேர். இந்த இளம்பெண் எல்லாரும் சேர்ந்து நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பீகாரில் இருக்கும் ஜோக்பானி வந்தார்கள்.
இந்தக் குழுவின் மீது எப்போதிருந்தோ பொறாமை கொண்ட… பிடிக்காத மற்றொரு குழுவினர் இந்த இளம்பெண்ணை நேபாளில் இருந்து அழைத்து வந்த விவரத்தை அறிந்து போலீசாருக்கு புகார் அளித்தனர்.
உடனே போலீசார் இந்தக் குழு உள்ள இடத்திற்குச் சென்று திடீரென்று சோதனை செய்தார்கள். அவ்வளவுதான்… இளம் பெண்ணோடு சேர்ந்து ஏழு பேர் சிக்கினார்கள்.
இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசார் அந்த ஏழு பேரையும் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து 1,09,500 ரூபாய் பணம், மொபைல் போன்கள், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு தொடர்புள்ள பேங்க் செக்குகள், 7 ஏடிஎம் கார்டுகள், நரபலி, க்ஷுத்ர பூஜை தொடர்புடைய பொருள்கள் போன்றவற்றை கைப்பற்றினார்கள்.
இந்தக் குழுவுக்கு இது போன்ற மாந்திரீக பூஜை செய்யும் பழக்கம் இருக்கிறது என்றும் சூரிய கிரகணத்தின்போது ஒரு அழகான இளம்பெண்ணை பலி கொடுக்க வேண்டும் என்று திட்டம் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளார்கள். அழகான பெண்ணை நேபாளில் இருந்து வரவழைத்தார்கள். ஆனால் இதையெல்லாம் வேறு யாரோ இவர்கள் மூலமாக செய்கிறார்கள் என்றும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ டீல் இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது
அந்த செக்குகள், பணம்… இவற்றைப் பொறுத்து யாரோ பெரிய மனிதர்களின் தொடர்பு இருப்பதாகவும் செய்தி தெரிந்துள்ளது. அவர்கள் யார் என்பதை போலீசார் விரைவில் கண்டறிவார்கள் என்று தெரிகிறது.
தற்போதைக்கு இந்த இளம் பெண்ணை பாதுகாப்பாக நேபாள் அனுப்பப் போவதாக போலிஸார் தெரிவித்தனர். கவனமாக இல்லாவிட்டால் இளம் பெண்கள் இதுபோன்ற வலையில் சிக்குவற்கு வாய்ப்புகள் அதிகம். உஷார்… பெண்களே!