இன்று மார்ச் 14 : ஆங்கிலேய அரசு இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை. அதில் ஒன்று மார்ச் 14ஆம் தேதி அரங்கேறியது. சென்ற நூற்றாண்டில், இந்தியாவில் இருந்த பலர், பிழைப்பிற்காக தென்னாப்பிரிக்காவில் சென்று குடியேறி இருந்தனர்.
இந்துக்கள் தங்கள் பரம்பரை வழக்கப்படி கல்யாணம் செய்து கொண்டால் அது செல்லுபடியாகாது என்றும் தேவாலயத்தில் கிறிஸ்தவ மதப்படி பதிவு செய்யாத திருமணங்கள் செல்லுபடியாகாது என்றும் 1913ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது.
தேவாலயத்தில் கிறிஸ்தவ சடங்குகளின் படி நடைபெறும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என்றும், திருமணமான இந்துக்கள் திருமணம் ஆனவர்கள் ஆக கருதப்பட மாட்டார்கள் என்றும் கூறிய வெள்ளை அரசின் மதவெறி- நமது இந்தியப் பெண்களின் குடும்ப உறவுகளை கொச்சைப் படுத்தியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறிய இந்துக்கள் போராடும் நிலை உருவாயிற்று.
ஏற்கனவே அங்கு நிலவிவந்த வெள்ளையரின் அடக்குமுறைகள் பொறுக்கொணாதவையாக இருந்தன . இந்தியர்களின் உரிமைக்காக அங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்த காந்தியடிகள் திருமணச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். பதினைந்தே வயதான தில்லையாடி வள்ளியம்மை அப்போராட்டத்தில் பங்கேற்றாள். சிறையில் அடைக்கப்பட்டு பெரும் துன்பத்திற்கு ஆளானாள். சிறையில் பற்பல கொடுமைகளை அனுபவித்து வந்தாள். சிறையிலேயே அவள் செத்துவிட்டால், கலகம் ஏற்படும் என்று பயந்த ஆங்கிலேயர்கள் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவளை சிறையில் இருந்து விடுவித்தனர் .
11 மாதங்கள் கழித்து 14 பிப்ரவரி அன்று விடுதலையான அவள், 22 பிப்ரவரி அன்று அவள் மரித்துப் போனாள் . இவ்வண்ணம் ஹிந்துக்களின்- கணவன் மனைவி உறவை கொச்சைப்படுத்திய வெள்ளையனை எதிர்த்து, வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை உயிர் துறந்தாள். இதன் மூலம் வெள்ளையர்கள் ஹிந்துக்களுக்கு இழைத்த கொடுமையை உணரலாம்.