Home அடடே... அப்படியா? காவல்துறை கெடுபிடி தொடர்ந்தால்… ஊரடங்கு முடியும்வரை பால் விற்பனை புறக்கணிப்பு!

காவல்துறை கெடுபிடி தொடர்ந்தால்… ஊரடங்கு முடியும்வரை பால் விற்பனை புறக்கணிப்பு!

milk
milk

காவல்துறையினரின் கெடுபிடிகளால் பால் முகவர்கள் கடைகளில் மட்டும் பால் விற்பனை.,
கெடுபிடிகள் தொடருமாயின் ஊரடங்கு முடியும் வரை பால் விற்பனையை முற்றிலுமாக புறக்கணிக்கவும் முடிவு
– பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

கொரோனா பேரிடர் காலமான தற்போது காவல்துறையினரால் பால் விநியோகம் செய்வதிலும், விநியோகம் செய்யப்பட்ட பாலுக்கான தொகை மற்றும் காலி பால் டப்புகளை வசூலிப்பதில் பால் முகவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இணையதள கூட்டம் (Zoom Meeting) இன்று பிற்பகல் 2.00 மணியளவில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

முதலில் இக்கூட்டத்தில் சீனாவின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டதோடு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரிகளை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 80நாட்களை கடந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் சூழலில் தமிழக அரசு ஊரடங்கிற்குள் ஊரடங்கு போட்டு மக்களை கசக்கி பிழிந்து வரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த ஊரடங்கிற்குள் ஊரடங்கு அமுலில் இருக்கும் போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனைக்கும், விநியோகத்திற்கும் தடையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் காவல்துறையினரோ பாதுகாப்பு என்கிற பெயரில் தேவையற்ற கெடுபிடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக வாகன நடமாட்டத்தை தடுக்கிறோம் என்கிற பெயரில் பிரதான சாலைகள் அனைத்தையும் சவுக்கு கம்புகளால் கட்டி முழுமையாக மூடி விடுகின்றனர். இதனால் பால் நிறுவனங்களின் வாகனங்கள் பால் முகவர்களின் கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பால் விநியோகம் செய்ய வாகனங்களில் செல்லும் பால் முகவர்களிடமிருந்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, அரசு கூறியுள்ள நேரத்திற்கு முன்னதாகவே கடைகளை மூடச் சொல்லி மிரட்டி, அவர்களின் கடைகளை பூட்டி சாவியை எடுத்துச் செல்வது என பால் விநியோகம் செய்யவிடாமலும், விற்பனை செய்ய முடியாமலும் பால் முகவர்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து இடையூறு அளித்து வருகின்றனர். மக்கள் பணியில் இருக்கும் பால் முகவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காவல்துறையினருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் தங்களின் உடல்நலத்தை குறித்து கூட கவலைப்படாமல் மக்கள் சேவையே மகேசன் சேவை என செயல்பட்டு வரும் பால் முகவர்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பால் விநியோகம் செய்திடவும், விநியோகம் செய்த பாலுக்கான தொகை மற்றும் காலி பால் டப்புகளை வசூலிக்க செல்லும் இடையூறு ஏற்படா வண்ணம் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவல்துறை சார்பில் பால் முகவர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பால் முகவர்களுக்கு காவல்துறையினர் இடையூறு செய்யும் நிகழ்வுகள் தொடருமாயின் வருகின்ற புதன்கிழமை முதல் சில்லறை வணிகர்களுக்கு பால் விநியோகம் செய்வது முற்றிலுமாக நிறுத்துவது எனவும், பொதுமக்கள் நலன் கருதி பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அரசு நிர்ணயம் செய்துள்ள நேரத்தில் பால் விற்பனை செய்வது எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version