சுதாராமன் என்பவர், இந்திய வனத்துறை சேவைப்பணி அதிகாரியான (ஐஎஃப்எஸ்) இவர், அடிக்கடி தமது டிவிட்டர் பக்கத்தில், காட்டு விலங்குகளின் வித்தியாசமான படங்களைப் பகிர்ந்து கொண்டு அவை குறித்து குறிப்பும் கொடுப்பார்.
பெரும்பாலும் யானைகள் இவரைக் கவர்ந்தவை. யானைகளின் வாழ்விடம், சூழல், வனத்தில் அவற்றின் தன்மை, மனிதர்களுடன் அவை கலந்து பழகும் விதம், யானைகளின் புத்திசாலித்தனம் என பல்வேறு தகவல்களை அவர் தமது டிவிட்டர் பதிவுகளில் பிரதிபலிக்கச் செய்வார்.
தற்போது அவர் பதிவிட்டிருக்கும் தகவல், தமிழகத்தைச் சேர்ந்த யானை குறித்தது என்பதால், தமிழக டிவிட்டர் மக்கள் அவரது இந்த ட்வீட்டுக்கு பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
அவர் பதிவிட்டிருக்கும் தகவலில், தமிழகத்தின் மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயிலின் யானை செங்கமலம் குறித்து தெரிவித்திருக்கிறார். இந்த யானைக்கு இயல்பாகவே அமைந்த தலைமுடியை அழகாக வாரிவிட்டு, யானைப்பாகன் முடியை வெட்டி விட்டிருக்கிறார். அது பார்ப்பதற்கு நெற்றிக்கு மேல் அழகாக வரிசையாக முடி கொத்தாக இருப்பதால், பாப் கட் செய்து கொண்டிருப்பது போல் தோன்றும்.
இதனைக் குறிப்பிட்டு, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்குப் போனால், பாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.