இயற்கை மேஸ்திரிகள்
கட்டுரை, புகைப்படம்: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்
நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்… தொலைக்காட்சியில் ஒரு தனியார் வங்கியின் சேமிப்புத் திட்டத்திற்கான விளம்பரத்திற்காக இரண்டு குருவிகள் தங்கள் கூட்டிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதை காட்டுவர். அத்தனை அழகான விளம்பரம் அது.
நாங்கள் வர்தாவில் இருந்தபோது எங்கள் வீட்டினருகில் இயற்கை வளம் நிறைந்த பகுதி என்பதால் பறவைகளின் வருகை எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.
பறவைகள் கூடு கட்டுவதே கண்கொள்ளாக் காட்சியாகும். தூக்கணாங்குருவி கூடு கட்டுவதை பார்ப்பதே ஓர் அழகு. இயற்கையின் படைப்பில் தூக்கணாங்குருவிக்கு மட்டுமே முடித்து போடும் கலையானது அதன் அலகில் வைக்கப்பட்டுள்ளதாம்.
ஆண் தூக்கணாங் குருவிதான் கூடு கட்டும். அது தன் அலகால் முடித்துப் போடும் விதமே தனி. பெரும்பாலும் முள் மரத்தின் மரக் கிளைகளில் முனையிலும், ஆழமான கிணறுகளிலும் தான் நிறைய தூக்கணாங்குருவியின் கூடுகளைப் பார்த்திருக்கிறேன். குறுகலாக ஆரம்பித்து, மேலிருந்து பார்த்தால் உருண்டை வடிவில் தெரியும். ஆனால், அது இரு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும்.
பின்னர் அதிலிருந்து ஒரு பாகத்தை மூடி, இன்னொரு பாகத்தை குழல் போல நீளமாக கொண்டு வந்து, மூடாமல் வைத்துவிடும். நேரில் பார்க்க அத்தனை பரவசம் நமக்கு.
அந்த குழாய்ப் போன்ற வடிவத்தின் வழியாக தாய்ப் பறவை உள்ளே செல்லும். ஆண் குருவி கட்டிய கூட்டை பெண் குருவி வந்து மேற்பார்வை செய்த பின்னே, தூக்கணாங்குருவியின் இனப்பெருக்கம் தொடரும் என புத்தகங்களில் படித்திருக்கிறேன். இயற்கையானது பெண் இனத்திற்கு கொடுத்துள்ள மதிப்பு!!!
புல்புல் (Bulbul) பறவையோ தன் இனத்துடன் வந்தே தாங்கள் கூடு கட்ட விரும்பும் இடத்தை தேர்வு செய்கிறது. பலமுறை நந்தியாவட்டை மரத்தைத் தான் இந்த குருவிகள் தேர்வு செய்கின்றன. இணைகள் இரண்டும் தங்கள் கழுத்துகளை சாய்த்து, சாய்த்து கிளைகளை தேர்வு செய்யும் அழகும், அப்போது இரண்டும் எழுப்பும் ஒலியோசையும் பார்வையாளர்களுக்கு விருந்து.
சிறிய கூடை போன்ற அழகிய கூட்டில் முட்டையிடும். பிறகு, பல மணி நேரங்கள், பல நாட்கள் அடை காக்கும். குஞ்சுக் குருவிகளுக்கு பறக்க கற்றுக் கொடுக்கும் விதமும் அருமை.
பச்சைக் கிளியானது தென்னை மரத்தின் பொந்துகளை தன் கூடாகப் பயன்படுத்துவதை தஞ்சை மாவட்டத்தில் கண்டுள்ளேன். அழகிய குரலைக் கொடுத்த குயிலுக்கோ இயற்கை சோம்பேறித்தனத்தையும் கொடுத்துள்ளது. காக்கையின் கூட்டில் தன் முட்டைகளை இட்டுவிடும் அதி சாமர்த்தியசாலி அது.
பூமி பல்லுயிர் வாழ்வதற்கான இயற்கை அளித்த கொடை. அதனால் பல வகை மரங்கள் வளர வகை செய்து இயற்கை மேஸ்திரிகளான பறவை இனத்திற்கு வீடுகள் அமைப்பதற்கும், பறவை இனத்தின் பாதுகாப்பிற்காகவும் உதவி புரிவோமே!