நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
கேள்வி: நவதுர்க்கைகளில் சைலபுத்ரியின் சிறப்பு என்ன?
பதில்: வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த க்ருத சேகராம் !வ்ருஷபாரூடாம் சூலதரீம் சைலபுத்ரீம் மஹேஸ்வரீம் !! என்பது சைல புத்ரியின் தியான ஸ்லோகம்.
ஜெகதாம்பாள் பார்வதி தேவியாக அவதரித்த சொரூபமே சைலபுத்ரி. சைலம் என்றால் பர்வதம் மலை. புத்ரி என்றால் குமாரி, மகள். பர்வத புத்ரீ என்றால் பார்வதி. உலகைக் காப்பதற்காக அம்பாள் ஏற்றுக்கொண்ட திவ்ய ரூபம் இது.
பார்வதி என்பவள் மகா சக்தி ஸ்வரூபம். கோடிக்கணக்கான சக்திகளின் ஒரே வடிவம் சைலபுத்ரி ஸ்வரூபம்.
இந்த தேவதையின் வழிபாடு ஞான சக்தியை அளிக்கிறது. அதர்மத்தை தண்டிக்கும் போது உக்ர ரூபம் எடுக்கிறாள். பராக்கிரமம், பிரசாதம் இரண்டும் ஒன்றிணைந்த சொரூபமே சைலபுத்ரி
துர்கா என்றால் ரட்சணை சக்தி. துர்க்கை ஸ்வரூபமே பார்வதிதேவி. இந்த தேவியை சரண் அடைவதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கப் பெறுகிறோம்.
ஹிமவானுக்கும் மேனா தேவிக்கும் பூரணமாக அவதரித்த பிரதம வடிவமே பார்வதி.
சைலபுத்ரி என்பது நவ துர்கைகளில் முதல் சொரூபம். நம் உடலில் மூலாதாரத்திற்கு அதிஷ்டான தேவதை இவள். ஏனென்றால் சைலம் என்பது ப்ருத்வி தத்துவம். அதன் சொரூபமே மூலாதாரம்.
நவ துர்க்கைகளின் வழிபாடு என்பது ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் பராசக்தியின் வழிபாடு.
யோகம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் கூட துர்கை சக்திகளை வழிபட்டு வந்தால் அந்தந்த சக்கரங்களில் உள்ள திவ்ய சக்திகள் விழிப்படைந்து தெய்வீகம் கிடைக்கப் பெறும் என்பது உட்பொருள்.
சைலபுத்ரி பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்யும் கோலத்தில் இருக்கிறாள்.
‘தாமக்னி வர்ணாம் தபசா ஜ்வலந்தீம் வைரோசனீம் கர்ம பலேஷு ஜுஷ்டாம்’ என்று கூறுகிறாற்போல… தவச் சக்திக்கும் ஞான சக்திக்கும் அடையாளமாக விளங்குகிறாள். சைலபுத்ரியை வழிபடுவதால் ஞானம், தியானம், சாந்தம், பாதுகாப்பு போன்றவற்றை அருளுகிறாள்.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.
தமிழில்: ராஜி ரகுநாதன்