நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி: நவதுர்கா வரிசையில் சித்திதாத்ரியின் சிறப்பு என்ன? சித்திதாத்ரியை எவ்விதம் வழிபட வேண்டும்?
பதில்: ‘சித்த கந்தர்வ யக்ஷாத்யை அசுரைரமரைரபி சேவ்யமானா சதா பூயாத் சித்திதா சித்திதாயினி என்று வர்ணிக்கப்படுகிறாள்.
யாராயிருந்தாலும் பெற வேண்டும் என்று நினைப்பது செய்த செயல்களின் பலனையே! நாம் எந்த வேலை செய்தாலும் அதன் பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புவோம்.
அதனால் ஒன்பது நாட்கள் வழிபட்ட பின் நாம் செய்த நவராத்திரி விரதம் பலன் அளிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
சித்திகளை (பலன்களை) பெறுவதற்காக வழிபடுகிறோம். யார் பலன் கொடுப்பார்கள்? விரத வடிவில் யாரை வழிபடுகிறோமோ அந்த தேவியே! அதனால் நமக்கு எது தேவையோ, எது யோக்கியமோ, எது மகிழ்வளிக்குமோ அப்படிப்பட்ட பலனை அளிக்கும் அம்பாள் ஆதலால் சித்திதாத்ரி என்றழைக்கப் படுகிறாள்.
நாம் பார்க்கும் மனிதர்கள், நாம் பார்க்க முடியாத தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள் அனைவருக்கும் இந்த அம்பிகையே தாய்.
யாருக்கு எந்த செயலில் பலன் பெற வேண்டும் என்றாலும் இந்த தேவியை வழிபட்டுப் பலன் பெறவேண்டும்.
படைப்பில் ஒவ்வொரு செயலுக்கும் பலன் கொடுப்பவளும் தவத்தை சித்தியடையச் செய்பவளும் சித்திதாத்ரியே.
நாம் வழிபடும் போது பல தவறுகள் செய்வோம். செய்தவருக்கு செய்தபடி மட்டுமே பலன் கிடைக்கும் என்று கூறும் போது நமக்குத் தவறுகளே மிகுந்திருக்கும். ஆனால் சித்திதாத்ரியை தியானம் செய்து தெய்வார்ப்பண புத்தியோடு வழிபட்டால் அந்த தவறுகளை எல்லாம் நீக்கி சம்பூரணமாக பலன் அளிப்பவள் சித்திதாத்ரி.
அதுமட்டுமல்ல. அஷ்டமா சித்திகளின் தாயும் இவளே! அணிமா மகிமா கரிமா லகிமா பிராப்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்று எட்டு சித்திகள் உள்ளன. இவளே இந்திரன் முதலான தேவர்களுக்கு தெய்வீகத்தை அருளியவள்.
சிருஷ்டியில் எந்த வஸ்துவுக்கு எந்த குணம் உள்ளதோ அதுவே அதன் சித்தி. இவ்வாறு லட்சணங்கள் அனைத்தையும் ஏற்படுத்தியவள் ஆதலால் ‘சித்திதா சித்திதாயினி’ என்று போற்றப்படுகிறாள்.
சித்திதாத்ரியை வழிபடுவதன் மூலம் நம் ஆன்மிக சாதனைகள் பலனளிக்கின்றன. இந்த நவராத்திரி விரதத்தின் போது மட்டுமின்றி இனிமேலும் எந்த பணிபுரிந்தாலும் தர்மத்தோடு கூடிய செயல்கள் அனைத்தும் கட்டாயம் நிறைவேறும்படி செய்பவள் சித்திதாத்ரி!