Home அடடே... அப்படியா? மனதுக்குப் பரவசம் தரும் கோஜாகிரி பூர்ணிமா!

மனதுக்குப் பரவசம் தரும் கோஜாகிரி பூர்ணிமா!

gojagiri-poornima1
gojagiri poornima1

கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

வட மாநில மக்கள் அஷ்வின ( ஐப்பசி) மாதத்தில் வரும் பௌர்ணமியை கோஜாகிரி பூர்ணிமா அல்லது ஷரத் பூர்ணிமா என்று கொண்டாடுகின்றனர். மத சம்பந்தப்பட்டதாகவும், விவசாய சம்பந்தப்பட்டதாகவும், ஆரோக்கிய சம்பந்தப்பட்டதாகவும், இந்த விழா கொண்டாடப்படுகிறது.

அஷ்வின மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சந்திரனானது பூமிக்கு மிக அருகில் வருவதாக கூறுகின்றனர். அதனால் சந்திரனின் ஒளியானது மிகவும் நல்லது என்று நம்பப்படுகிறது.

gojagiri poornima2

இந்து தர்மப்படி, பல மாநில மக்கள் தங்கள் வழக்கப்படி ஷரத் பூர்ணிமா கொண்டாடுகிறார்கள். கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மக்கள் லட்சுமி தேவி, சிவ பெருமான், பார்வதி தேவி, இந்திரன் முதலிய தெய்வங்களை வழிபடுகின்றனர். இரவு 12 மணி வரை விழித்துக் கொண்டு பல பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர்.

குஜராத்தில் கர்பா நடனமாடி கொண்டாடுகின்றனர்.
ஒடிசாவில் ஷரத் பூர்ணிமா ‘குமார் பூர்ணிமாவாக’ கொண்டாடப்படுகிறது. மக்கள் கஜலெட்சுமி பூஜை செய்கின்றனர்.

திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைப்பதற்காக இந்த பூஜையை செய்கின்றனர்.
மிதிலாவில் ஷரத் பூர்ணிமா அன்று திருமணமானப் பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர்வரிசைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஹிமாச்சல் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், வங்காளத்திலும் ஷரத் பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

ஹேமலதா முகல், வர்தாவில் இருக்கும் ஆசிரியை கூறும்போது,
” மஹாராஷ்டிராவில் கோஜாகிரி பூர்ணிமாவில் சிவபெருமான், பார்வதி தேவி, பிள்ளையார் போன்ற தெய்வங்களை வழிபடுவர். லெட்சுமி தேவி சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். மராட்டியில் ‘கோன்’-என்றால் ‘யார்’ என்று அர்த்தம், ‘ஜகத் ஆஹே’- என்றால் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். லெட்சுமி தேவி, யார் யார் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்? – என்று பார்ப்பதாக சொல்கிறார்கள்.

gojagiri poornima3

மஹாராஷ்டிராவில் இளம் பெண்கள், கணபதி விசர்ஜனுக்கு அடுத்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு ‘குலாபாய்’ (Gulabai) பண்டிகை கொண்டாடுவர். பார்வதி தேவிக்கு குலாபாய் என்றும், சிவ பெருமானுக்கும், குழந்தை கணபதிக்கும் குலாஜி என்றும் கூறுவர். இளம் பெண்கள் மாதம் முழுவதும் குலாபாயை வழிபட்டு பல பாடல்களை பாடி மகிழ்வர்.

பெரும்பான பாடல்கள் பெண்களின் வாழ்வையொட்டியதாய் இருக்கும். மருமகள், மாமியார் மற்றும் நாத்தனார் உறவுகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும். பின்னர், ஆரத்தி எடுத்து ‘கிராபட்’ (Khirapat) என்னும் பிரசாதம் படைப்பர்.

அந்த பிரசாதத்தை ஒளித்து வைத்து, அடுத்தவர்கள் கண்டுபிடிக்கும் விளையாட்டையும் விளையாடுவர். மாதத்தின் இறுதி நாளன்று, குலாபாய், குலாஜி சிலைகளை வழிபட்ட பிறகு ஆற்றில் கரைத்து விடுவர்.

பிறகு, கோஜாகிரி பூர்ணிமா அன்று பாலை சுண்டக் காய்ச்சி, சந்திரனின் கிரணங்கள் பாலில் விழுந்தப் பின் பார்வதி தேவியை வணங்கி, பாலை அருந்துவர்” என்றார்.

ஆயுர்வேத மருத்துவம் படிக்கும் தனஸ்ரீ சுர்கார் கூறுகையில், ” கோஜாகிரி பூர்ணிமாவானது அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. பருவமழையின் முடிவாகவும் கருதப்படுகிறது. அதனால் விவசாயிகளும் இப்பண்டிகையை விமர்சையாக கொண்டாடுகிறார்கள். ஆதிவாசி மக்களும் கோஜாகிரி நாட்டியம் ஆடி கொண்டாடுகிறார்கள். தங்கள் தெய்வங்களான மாய்லோமா (வயல்களை காக்கும் தெய்வம்), கோலோமா ( Kholoma) இரவில் வழிபடுகின்றனர்.

ஆயுர்வேதப்படி, பருவ கால முடிவில் பித்தம் சம்பந்தமான தொந்தரவுகள் மனிதர்களுக்கு உண்டாகும். அதை தீர்க்க குளுமையானதாக கருதப்படும் பாலை அருந்துவதற்காக கோஜாகிரி பண்டிகையில் பாலை பிரசாதமாக வைக்கிறார்கள். ஹரியாணாவிலும் இவ்வழக்கம் உள்ளது,” என்றார்.

இளம் குளிருடன், முழு நிலவின் ஒளியுடன், சத்தான பாலை பருகி கோஜாகிரி பூர்ணிமா கொண்டாடும் அனுபவமே பரவசமாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version