ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாடலும் விளக்கமும்
விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். (20)
பொருள்
அமரர் துயர் துடைப்பதில் முதன்மையானவனாக விளங்குபவனே! பக்தர்களின் துயரங்களுக்கு முடிவு கட்டுபவனே, நீ எழுவாயாக! அனைத்து நற்குணங்களும் பொருந்தியவனே! அனைத்து ஆற்றல்களும் அமையப் பெற்றவனே!
மாசு நிரம்பிய ஜீவர்களுக்கு மறக்கருணை காட்டி அவர்களது குறைகளை நீக்கி அருளும் தூய்மைப் பொருளே, துயில் எழுவாயாக! மங்களமே வடிவெடுத்த நப்பின்னைத் தாயே! சகல ஐசுவரியங்களும் நிரம்பியவளே! துயில் எழுவாயாக! உன்னை ஆட்கொண்ட அந்தக் கண்ணனுக்கு வெண்சாமரம் வீசி, திருமுகம் காட்டித் துயில் எழுப்புவாயாக. உங்கள் இருவரின் தரிசனத்தைப் பெற்று நாங்கள் ஆனந்த மழையில் நீராடக் காத்திருக்கிறோம். அருள்புரிவாய்.
அருஞ்சொற்பொருள்
முப்பத்து மூவர் அமரர் – முப்பத்து முக்கோடி தேவர்கள்
கப்பம் – நடுக்கம்
கலி – முடிவுக்குக் கொண்டு வருபவன், பெரு வீரன்
செப்பம் – செம்மை
திறல் – திறமை, ஆற்றல்
செற்றார் – தீயவர், எதிரிகள் (அடியார்களுக்குத் தீங்கு செய்பவர்கள்)
விமலன் – தூயவன்
செப்பு – செம்புக் கலசம்
அன்ன – போன்ற
செவ்வாய் – செம்மையான வாய், சிவந்த வாய்
மருங்குல் – இடை
திரு – ஐசுவரியம், மகாலக்ஷ்மி
உக்கம் – விசிறி
தட்டொளி – கண்ணாடி (தட்டு ஒளி)
நீராட்டு – (எங்களை) மகிழ்ச்சியடைய வைப்பாயாக
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்த்தல் –
பகவானின் எத்தனையோ அவதாரங்கள் அசுர சம்ஹாரத்துக்காக நிகழ்ந்தவையே. இவை அனைத்தும் தேவர்களின் துயரையும், பக்தர்களின் துயரையும் துடைப்பதற்காக. வாமன அவதாரம், ராமாவதாரம் எனப் பல்வேறு நாமாக்களில் வெவ்வேறு அவதாரத்தைப் போற்றிய ஆண்டாள், இங்கு மொத்தமாக அனைத்து அவதாரப் பெருமையையும் பேசுகிறாள்.
கப்பம் – கம்பனம்
கம்பனம் என்றால் நடுக்கம். நடுக்கத்துக்குக் காரணம் பயம். பயத்துக்குக் காரணம் தீமை.
கப்பம் என்பதற்கு அடிமைப்படுவது என்றும் பொருள் கொள்ளலாம். தேவர்கள் அசுரர்களுக்கு அடிமைப்படாமல் ஓடிச்சென்று காத்தவன்.
செப்பன்ன – முற்காலங்களில் பணம், நகை முதலானவற்றை செப்புக் குடங்களில் போட்டு வைப்பார்கள். எனவே, செப்பு என்பது பொக்கிஷம் நிரம்பி இருப்பதைக் குறித்தது. தாயாரின் இதயத்தில் இருக்கும் பொக்கிஷம் காருண்யம்.
உக்கமும் தட்டொளியும் – அதிகாலையில் அரசர்களுக்குச் செய்யப்படும் வந்தி உபசாரங்கள் (வந்தி உபசாரம் என்பது அரசனுக்குச் செய்யப்படும் உபசாரம். வைத்தாலிகம் என்பது ஆலயங்களில் பெருமாளுக்குச் செய்யப்படுபவை.)
மொழி அழகு
செற்றார்க்கு வெப்பம் கொடுப்பவன் –
தீமையை எரிப்பவன். எரிப்பது வெம்மையால் ஏற்படுவது. எனவே வெப்பம்.
இவனை எதிர்த்து நிற்பதற்கு முடியாமல் பயத்தில் ஜுரம் கண்டு விடும். அதனால் வெப்பம்.
தீயோர் இவனை எதிர்த்து நிற்க வேண்டுமெனில் அளவிலாத பராக்கிரமத்தைக் காட்டியாக வேண்டும். அதனால் அவர்களுக்குள் வெம்மை எழும்.
ஆன்மிகம், தத்துவம்
விமலன் – மலம் ஏதும் இல்லாதவன், குறைகள் இல்லாதவன், குற்றம் இல்லாதவன், தூய்மையானவன்
தனது இயல்புக்கு அப்பாற்பட்ட எதுவுமே இல்லாத தன்மையே தூய்மை. இந்த ஸ்ருஷ்டி அனைத்தையும் படைத்த அந்தப் பரந்தாமன் இந்த ஸ்ருஷ்டிக்கு உள்ளும் வெளியிலும் விரவிப் படர்ந்தவன். அதேநேரத்தில், இந்த ஸ்ருஷ்டியின் எந்த அம்சத்தாலும் தொடப்படாதவன். அவன் தூய்மையிலும் தூய்மையானவன். அந்தத் தூய்மையை எவ்வாறு வார்த்தைகளால் வர்ணிப்பது?
பரமனின் தூய்மை, அமரத்துவம், சைதன்யம் என எதையுமே நமது அறிவினால் உள்வாங்கிக் கொள்ளவும் இயலாது, வார்த்தைகளால் விளக்கவும் முடியாது. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத அவனை நம்மால் இயன்ற ஏதேதோ பெயரிட்டு அழைக்கிறோம். விமலன் என்பதும் அத்தகையதே.