Home அடடே... அப்படியா? தந்தனத்தோம் என்று சொல்லியே…

தந்தனத்தோம் என்று சொல்லியே…

villupattu2
villupattu2

கட்டுரை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

கிராமங்களில் நடைபெறும் கொடை விழாவின் போது முக்கியமாக இடம்பெறும் கலை நிகழ்ச்சி வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி ஆகும். இரவு முழுக்க முழுக்க வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

வில் அடிச்சான் கோவிலிலே விளக்கு வைக்க நேரமில்லை….. என்ற சொல்வழக்கு நெல்லை கிராமங்களில் உண்டு.

பாண்டிய மன்னர்கள் இந்தக் கலையை பெரிதும் ஊக்குவித்து வந்தார்கள் என்று தெரிகிறது. ஆனால் கிபி 15 நூற்றாண்டில் தான் வில்லிசை தோன்றியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பாண்டிய மன்னன் ஒருவன் தன் வேட்டை நாயை கையில் பிடித்தபடி அமைச்சர்கள் சகிதம் காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறார். அப்பொழுது ஒரு மானை வேட்டை ஆடுகிறார்.
மானை வேட்டையாடி மகிழ்ந்தாலும் அந்தமானின் குட்டி படும் அவதியைக் காண்கிறார். வருத்தம் அடைகிறார்.

இச்செயலுக்கு ஏதாவது பரிகாரம் உண்டா? என்று தலைமை அமைச்சரிடம் கேட்கிறார் மன்னர்.

இறைவனிடம் நெருங்குவதற்கும், இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்பதற்கும் இசை ஒரு சாதனமாகும் என்கிறார் தலைமை அமைச்சர். மன்னன் உடனேயே இசை வேள்வியை ஆரம்பித்தான்.

காட்டிலுள்ள ஒரு மரத்தின் கிளையை வில்லாகச் செய்து கயிற்றால் கட்டி ஒரு கோலால் (சுள்ளி) வில் இசைக்க ஆரம்பித்தான். தண்ணீர் கொண்டு சென்ற மண்பானைகள் கடம் ஆகின. விடிய விடிய பாடினான் பாண்டிய மன்னன். வில்லு இப்படித்தான் பிறந்ததாக பாண்டிய நாட்டில் ஒரு கதை உண்டு!

தந்தனத்தோம்… . என்று தலைமை அமைச்சர் அடி எடுத்துக் கொடுக்க மற்ற அமைச்சர்கள் ஆமாம்….ஆமாம்….. என்று பதில் பாட்டு பாடினார்கள்.

நல்ல வைரம் பாய்ந்த பனைமரத்தை நன்றாக செதுக்கி வில்லாக வளைத்து அதன் இரு நுனிகளையும் இணைத்து கயிறைக் கட்டுவார்கள். இந்தக் கயிற்றில் மணிகள் தொங்கவிடப் பட்டிருக்கும்.

வளைந்த பனைமரத்தை வில் கதிர் என்பார்கள். இந்த வில் கதரின் நடுப்பகுதி மண் குடத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

வில் இசைப்பவர் கையில் வைத்திருக்கும் கோலுக்கு வீசு கோல் என்று பெயர். பாட்டிற்கு ஏற்ப தாளம் போட இந்த வீசு கோலைப் பயன்படுத்துவார் வில் இசைக்கும் தலைமைக் கலைஞர்.

ராஜாக்கள் ஆண்ட காலக்கட்டத்தில் போர் வீரர்களின் முன்பாக அவர்களின் சோர்வைப் போக்க வில் இசைத்த வரலாறு உண்டு. இப்படி பல செவி வழிச் செய்திகள் உள்ளன.

நாடு நல்ல நாடு…..
எங்கள் நாவலர்கள் புகழும் நாடு………

இப்படி ஒவ்வொன்றாக பாடி விளக்கம் அளிப்பார் முகபாவத்துடன் வில்லிசைக் கலைஞர். அவர் கதை சொல்லும் பொழுது ஆமாம் ஆமாம் என்றும் கூட இணைந்திருப்போர் பதில் மொழி சொல்வார்கள்.

கிராம தேவதைகள் எல்லாம் ஊரின் ஒதுக்குப்புறத்திலும், இன்னும் சொல்லப்போனால் வனங்கள் அடர்ந்த பகுதியில் கோவில் கொண்டிருக்கும். எனவே காட்டுப்பகுதியில் இரவு நேரத்தைக் கழிக்க வில்லிசை சிறந்தது என்று அக்கால மக்கள் தேர்வு செய்தார்கள். விடிய விடிய வில்லிசை நடைபெறும்.காட்டு மிருகங்களின் பயம் இருக்காது.

வில்,உடுக்கை, குடம், கட்டை போன்றவை வில்லிசை நடத்த தேவையானவை. இக்காலத்தில் ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

villupattu

கொடை நாட்களில் அவசியம் வில்லிசை இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கலைமாமணி சுப்பு ஆறுமுகம் மிகச்சிறந்த வில்லிசைக் கலைஞராக இன்றும் இருந்து வருகிறார். இவருக்கு பத்மஸ்ரீ(2021) விருதினை அரசு வழங்கியுள்ளது.

வில்லிசை வேந்தர் பிச்சைக் குட்டி, செவல் தங்கையா, தோவாளை சுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் சின்னமணி, நாச்சிமார் கோயிலடி ராஜன், ‌நெல்லை புலிக்குட்டிப்புலவர், கலைமாமணி முத்துசாமி தேவர்- போன்ற வில்லிசைக் கலைஞர்கள் வாழ்ந்த பூமி இது………………

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களும் குலதெய்வம் ராஜகோபால் அவர்களும் வில்லிசையை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர்கள்.

  • கட்டுரையாளர் – ஆசிரியர், கலைமகள்/ மஞ்சரி

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version