குதிகால் வலி ஏற்பட காரணங்கள்
குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க பர்சா எனும் திரவப்பையில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும்.
குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்வதின் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படும். ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் குதிகால் வலி வரலாம்.
பெண்களில் பலரும் ஹைஹீல்ஸ் செருப்புகளை காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.
காசநோய், முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் குதிகால் வலி வரலாம்.
கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கூம்பு வடிவ ஷூக்களை அணிவதால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, காலில் வலி ஏற்படும்.
குதிகால் வலி குறைய செய்ய வேண்டியவை
தரையில் பாதங்களை அழுந்த பதித்து நின்று கொண்டு முன்னங்காலை ஊன்றி குதிகால்களை உயர்த்தவேண்டும். இதே போன்று 10 முறை செய்தால் கால்வலி குறையும்.
தரையில் படுத்து கொண்டு காலின் பாதங்களுக்கு அடியில் ஒரு உடற்பயிற்சி பந்தினை வைத்து பாதங்களை கொண்டு அதில் மெதுவாக அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை தொடர்ந்து 15முறை செய்யவேண்டும்.
மேலும் குதிகால் வலி வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையில் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.
செருப்புகளை கழற்றிவிட்டு காலை நன்கு தரையில் பதித்து நின்று கொள்ளவேண்டும். கட்டை விரலை உயர்த்தவேண்டும். பின் சுண்டுவிரலை உயர்த்தவேண்டும். இதே போன்று 5 முறை ஒவ்வொரு காலிலும் செய்தல் வேண்டும்
கால் பாதங்களில் அதிக வலி இருக்கும் போது டென்னிஸ் பந்தினை கால் பாதங்களின் அடியில் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உருட்டவேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி கால்களில் வலி குறைகிறது.