ஏப்ரல் 25: இன்று உலக மலேரியா தினம்…
இதனை எதற்காக கடைபிடிக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 உலக மலேரியா தினம் ஆக கடைபிடிக்கிறோம். இன்று இவ்வாறு இதனை கடைபிடிப்பதன் முக்கிய நோக்கம் மலேரியா என்ற உயிர்க்கொல்லி நோய் குறித்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்துவதற்காகவும் இதனை பரவாமல் தடுப்பதற்காகவும்.
இந்த நோய் முக்கியமாக ஆசியா ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மக்களை பாதிக்கிறது. தற்போது இந்த நோய்க்கு சிகிச்சை அளித்து ஓரளவு கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
தற்போது மலேரியா, பிளேக் போன்ற நோய்களை குறித்து நினைத்தால் வியப்புத்தான் ஏற்படுகிறது. ஏனென்றால் அந்த நோய்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் விதமாக தற்போது கொரோனா என்ற கொள்ளை நோயின் பிடியில் சிக்கி உலகம் தவித்து வருகிறது.
மலேரியா நோய் பெண் அனோபிலஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. டபிள்யூஹெச்ஓ 2017 ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி 87 நாடுகளில் 210 மில்லியன் மலேரியா நோயாளிகள் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. 4 லட்சத்து 35 ஆயிரம் நோயாளிகள் மரணித்ததாக கணக்கு உள்ளது.மலேரியா நோய் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது.
மலேரியா கொசுக்கள் முக்கியமாக மாலை நேரத்தில் வந்து தாக்குகின்றன. மழை நாட்களில் அதிகமாக பெருகுகின்றன. மலேரியா கொசுக்கள் ஆண் பெண் என்ற பேதமின்றி அனைவரையும் கடிக்கிறது. குழந்தைகளுக்கும் கர்பிணி பெண்களுக்கும் இந்நோய் மிகவும் ஆபத்தானது.
மலேரியா நோயின் லட்சணங்கள்- கொசு கடித்த பின்பு 10 லிருந்து 12 நாட்களுக்குப் பிறகுதான் மலேரியா நோய் பாதிப்புகள் வெளிப்படுகிறது. அப்போது அதிகமாக காய்ச்சலும் குளிரும் இருக்கும். மிக அதிகமாக வியர்த்துக் கொட்டுவதும் தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதும் மலேரியா நோயின் லட்சணங்களாகத் தெரிகிறது
கொசுக்கடியால் இந்த நோய் பரவுவதால் கொசுக்கள் முட்டை இட்டு வளர்வதற்கு ஏதுவான நீர் தேங்குவதை தடுப்பதே முக்கியமாக பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய வேண்டிய முன்னெச்சரிக்கை.
முன்பெல்லாம், “காய்ச்சலா? மலேரியாவாக இருக்கலாம்” என்பதே மருத்துவத்துறையின் அறிவிப்பாக இருந்தது. மக்கள் மலேரியா காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதற்கான மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும் என்றும் இவ்வாறான அறிவிப்புகளை அடிக்கடி கேட்டோம்.
ஆனால் இப்போதோ கொரோனா கொரோனா என்ற பேச்சே காதில் விழுகிறது எங்கு பார்த்தாலும்.
முன்பெல்லாம் ஒவ்வொரு ஜுரம் வந்த நோயாளியும் ரத்தப் பரிசோதனை செய்து மலேரியாவா என்று கண்டுபிடிப்பதற்காக மருத்துவத்துறை முயற்சித்தது.
மலேரியா நோய் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் என்னவென்றால் தனிமனிதனும் சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும். வீடுகளில் சுவர்களுக்கு கூட கொசு மருந்து அடித்து செல்வது வழக்கம். கட்டடங்கள் கட்டும் போது அங்கு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அனாபிலிஸ் கொசுக்கள் தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு லார்வா பியூபாவாக வளர்ந்து பெரிய கொசுவாக மாறுகிறது.
இதற்கு கொசு வலைகளை கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்… வீட்டுக்கு வெளியில் படுத்துறங்க வேண்டாம் என்றும் வெறும் வயிற்றில் மலேரியா நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என்றும் முழு அளவு அந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டிய நாட்கள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
உலக கொசு தினம் கூட ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது என்ற செய்தி நமக்கு வியப்பை விளைவிக்கும்.