கட்டுரை: கமலா முரளி
நம் அன்றாட வாழ்வில், தொழில் நுட்பத்தின் பங்களிப்பு இல்லாமல், ஒரு விநாடி கூட நம்மால் கடந்து செல்ல முடியாத அளவுக்கு தொழில்நுட்பம் நம்மோடு ஐக்கியமாகிவிட்டது.
முறைப்படுத்தப்பட்ட கல்வி முறை ,பல்கலைக்கழக படிப்பு என எதுவும் இல்லாத காலத்திலேயே நாம் சின்னஞ்சிறு கருவிகளைப் பயன்படுத்தித் தான் வந்திருக்கிறோம்.
கிணற்றில் விழுந்த பொருளைத் துளாவி எடுக்கும் “பாதாளக் கரண்டி”, ஆழமாக நிலத்தை உழும் ”ஏர்க்கலப்பை” என்னைச் சிறு வயதில் மிக அதிசயப்பட வைத்திருக்கிறது. நார்ப்பிரியின் உதவியுடன் மரம் ஏறி, தேங்காய் வெட்டுபவரின் திறன் கண்டு வியந்திருக்கிறேன்.
அதே நேரத்தில், பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் இந்தியாவை தொழில்நுட்பத்தில், விண்வெளி ஆராய்ச்சியில், அணு விஞ்ஞானத்தில் முன்னேற்றமடையச் செய்ய இந்திய அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகள் மற்றும் களப்பணிகள் பற்றியும் படித்து பெருமையுற்றிருக்கிறேன்.
1998 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் நாள், பொக்ரான் சோதனைக் களத்தில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. அதைத் தொடந்து மே 18ம் நாளும் சோதனை நடத்தப்பட்டது.
“ஆபரேஷன் சக்தி” எனப் பெயரிடப்பட்ட இச்சோதனை, முதலில் சர்வதேச அளவில் மற்ற நாடுகளால் எதிர்க்கப்பட்டாலும், மெல்ல மெல்ல, இந்த வெற்றிகரமான அணுகுண்டு சோதனை, உலக அளவில் இந்தியாவுக்கு அணு வல்லரசு நாடு என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது.
வாஜ்பாய் அவர்கள் ஆட்சிக்காலத்தில், ஏவுகணை நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தலைமையிலான அறிவியல் தொழில்நுட்பக் குழு,வெற்றிகரமாக நிகழ்த்திய இந்த சோதனையால்,உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது.
இந்திய தொழில்நுட்ப வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான இந்நாளை நினைவு கூறும் வகையிலும், மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே தொழில்நுட்பம் பற்றிய ஆர்வத்தை அதிகரிக்கவும், நம் விஞ்ஞானிகளின் உழைப்பையும் சாதனை முயற்சிகளையும் பாராட்டவும் , 1999 ஆம் ஆண்டு முதல்,
ஒவ்வொரு வருடமும், மே 11ம் நாள் தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.
பொக்ரானில், 1974ஆம் ஆண்டே அணுசக்தி சோதனை “புத்தர் சிரிக்கிறார்” என்ற பெயருடன் நடத்தப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே, ஐந்தாண்டு திட்டங்களில், தொழில் வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய கழகங்களை ( விண்வெளி ஆராய்ச்சி நிலையம் போன்று) உருவாக்குதல், சிறந்த விஞ்ஞானிகளைத் தரம் கண்டு அவர்கள் தலைமையில் சிறப்புப் பணிகளை/ திட்டங்களைச் செயல்படுத்துதல் என படிபடியாக வெற்றியை எட்டிப் பிடிக்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டது ! இன்றும் மேற்கொண்டு வருகிறது.
அறிவியல் தொழில் நுட்பத்தினால், மிகக் கடினமான வேலைகளைக் கூட எளிதாகச் செய்துவிடலாம்.
இந்த தசாப்தத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சி, முன்னேற்றம் மகத்தானது.
விரல்நுனியில் உலகச் செய்திகளை, எந்த விஷயத்தைப் பற்றிய தரவுகளை ஒரு சாமானிய மனிதனால் அறிந்து கொள்ளும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
கல்வித்துறையோ, மருத்துவத்துறையோ,சட்டத்துறையோ, விளையாட்டுத்துறையோ, கலைத்துறையோ… எத்துறை ஆனாலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு பீடு நடை போடும் நேரம் இது!
இளைஞர்கள் புதுப்புது கருவிகளையும், தொழில்நுட்பமுனைவுடன் புது உத்திகளையும் கண்டுபிடிப்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை !
நாமும் கொண்டாடுவோமே தேசிய தொழில்நுட்ப தினத்தை !
கட்டுரையாளர்: ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்று ஆசிரியராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர்.
கடà¯à®Ÿà¯à®°à¯ˆ à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®• உளà¯à®³à®¤à¯ சகோதரி