ஒரே நேரத்தில் பல நோய்களுக்கு தீர்வளிக்கும் கீரைகள் ஒரு சில மட்டுமே இருக்கின்றன. அதில் ஒன்று தான் சுக்கான் கீரை.
100 கிராம் சுக்கான் கீரையில் சுண்ணாம்புச் சத்து – 60 மி.கி, இரும்புச் சத்து – 9 மி.கி, மணிச்சத்து – 15 மி.கி, வைட்டமின் ஏ – 10 மி.கி, வைட்டமின் சி – 13 மி.கி, தயாமின் – 0.03 மி.கி, ரைபோஃபிளேவின் – 0.066 மி.கி அடங்கியுள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.
குடற்புண் குணமாக
சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண்கள் வேகமாக குணமாகும்.
அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவில் தினந்தோறும் சுக்கான் கீரையை சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலமாகி, அதன் இயக்கம் சீராகும்.
பற்கள்: சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அப்பொடியை கொண்டு தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்களில் ஏற்படும் வலி நீங்கி, பற்கள் மற்றும் பல் ஈறுகள் உறுதியாகும்.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்தாக இருக்கிறது. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு பக்குவத்தில் சமைத்து தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.
பசியைத் தூண்ட
சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கி, அதை சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
ஈரல் பலப்பட
மது, புகை, போதை வஸ்துக்கள் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கல்லீரல் வெகு விரைவில் பாதிக்கப்படுகிறது. இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. எனவே கல்லீரல் குறைபாடு கொண்டவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து பருகி வந்தால் கல்லீரல் நன்கு பலப்படும்.
நெஞ்செரிச்லைத் தடுக்க
ஒரு சிலருக்கு இந்த அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களாலும் மற்றும் வாயு கோளாறுகளாலும் என்ன உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இப்படிப்பட்டவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து, கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் விரைவில் நீங்கும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்த
சுக்கான் கீரை இயற்கையிலேயே இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் சட்னி பதத்தில் அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சுத்தி ஏற்படும்.
தேள் கடிக்கு
நம்மை தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும். எனவே தேள் கடிபட்டவர்களுக்கு உடனடியாக கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. உடலில் பரவிய விஷம் விரைவில் நீங்கும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக சுக்காங்கீரை இருக்கிறது. இந்த சுக்கான் கீரையை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு நான்கு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கடுமை தன்மை குறைந்து சீராக சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குகிறது
சுக்கான் கீரையை சுத்தம் செய்து, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலையின் வீரியத்தை குறைக்கும்.
சுக்கான் கீரையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கலாம்.
வாந்தியைக் கட்டுப்படுத்தும்.. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். நீர்க்கடுப்பைக் குணப்படுத்தும்.