ஜூன் 18 உலக பிக்னிக் தினம். நாளெல்லாம் உழைத்துச் சோர்வடையும் மனிதன் தனக்கு உகந்தவர்களோடு சேர்ந்து தரமான நேரத்தை இயற்கைச் சூழலில் செலவிட விரும்புவதை இத்தகைய பிக்னிக் போன்ற தினங்கள் உறுதி செய்கின்றன.
நம் வீடுகளில் மொட்டை மாடியிலோ அல்லது நதிக்கரையிலோ கடற்கரையிலோ நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. அதனையே வெளிநாட்டில் உலக பிக்னிக் தினம் என்று பெயர் சூட்டி கொண்டாடப்படுகிறார்கள் என்று கூடச் சொல்லலாம்.
சுற்றுலா வேறு. பிக்னிக் வேறு. சுற்றுலா தினம் செப்டம்பரில் வருகிறது.
பிக்னிக் நமக்கு ஒன்றும் புதிதல்ல. உறவுகள் வீட்டில் நிறைந்திருக்கும் போது நிலா சாப்பாடு சாப்பிடுவது என்பது பாரம்பரியமான ஒன்றுதான். அவரவர் வழக்கமான உணவுகளுடன் (நம் ஊராக இருந்தால் புளியோதரை… வட இந்தியாவாக இருந்தால் சப்பாத்தி) பழங்களுடன் ஆடலும் பாடலுமாக அன்றைய பொழுதை கழிப்பது மிக இன்பமானது. அது பௌர்ணமியன்று முழு நிலா வெளிச்சத்தில் இயற்கையோடு இயைந்து சுற்றம் சூழ அனுபவிக்கும் தினமாக நிறைந்து இருக்கும். இந்த கோரோனா காலத்தில் நம் குடும்பத்தினரோடு அப்படிப்பட்ட ஒரு நிலாச்சோறு நமக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும்.
கூடைகளில் சாப்பாடு தண்ணீர் குளிர்பானங்கள் பழங்கள் தின்பண்டங்கள் ஜமுக்காளம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் தோட்டங்களுக்கும் தோப்புகளுக்கும் சென்று அமர்ந்து உண்பது என்பது அவ்வப்போது தேவைதான்.
ஆனால் தற்போது கோவிட் சூழலில் அவரவர் வீடுகளிலேயே பால்கனியிலோ மொட்டை மாடியில் அமர்ந்து உண்பது மேல். இயற்கையோடு இணைந்திருப்பதற்கு மனித மனம் ஏங்குவதை இத்தகைய நாட்கள் நிரூபிக்கின்றன.
உண்மையில் இதனை வனபோஜன தினம் என்று அழைப்பது சரியாக இருக்கும். பிக்னிக் என்பது வன போஜனம் தானே.
கார்த்திகை மாதத்தில் சிவபூஜை செய்து விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து நண்பர்களோடும் உறவுகளோடும் சிவத் தலங்களுக்கோ தோட்டங்களுக்கோ சென்று அங்கேயே சமைத்து நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்து உண்பது வனபோஜனம். இதெல்லாம் நம் கலாசாரத்திலும் பாரம்பரியத்திலும் ஏற்கனவே இருப்பதுதான்.
இங்கு இரு மாநில தெலுங்கு மக்களும் ஒவ்வொரு வருடமும் இவற்றை கட்டாயம் கடைபிடிக்கிறார்கள். அன்று ஒருவரை யொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வது விளையாட்டுகளில் ஈடுபடுவது போட்டிகள் வைத்துக்கொள்வது பரிசளித்து கொள்வது என்று மிகவும் ஆனந்தமாக கழிப்பார்கள்.
நிலாச்சோறு மட்டும்தான் இரவில் நடக்கும். இது போன்ற வனபோஜனங்கள் பகலில் நடக்கும். அது தரும் ஆனந்தமும் புதிய புதிய நட்பும் போட்டிகளும் விளையாட்டுகளும் தரும் உற்சாகமே வேறுதான்.
ஆனால் பிக்னிக் வனபோஜனம் போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மிகப்பெரும் ஆபத்து இருக்கவே செய்கிறது. பிக்னிக் செல்பவர்கள் சாப்பிட்டுவிட்டு அங்கங்கே பிளாஸ்டிக் கழிவுகளை வீசியெறிந்து வருவது அந்த இடத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் பிக்னிக் செல்பவர் ஒவ்வொருவரும் சமூக நலனில் அக்கறை கொண்டு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.