இலங்கையில் இன்று எஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடி மடம் பருத்தித்துறையில் காணப்படுகிறது. இந்த மடம் 1898-1901ம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த பிராமணரான வைத்தீஸ்வரக் குருக்களின் தகப்பனார் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்களால் அமைக்கப்பட்டது.
தெருவின் இரு பக்கமும் பொழிகல்லுத் திண்ணைகள் காணப் படுகின்றன. இத்தூண்களில் தெருமூடி மடம் கட்டுமானத்துடன் தொடர்பான இப்பிராமண குடும்பத்தினரின் பெயர்கள் பொறிக்கப் பட்டுள்ளன. மேற்புறம் தெருவை மூடி ஓரோடுகளால் வேயப்பட்ட கூரை காணப்பட்டது. தற்போது தட்டை ஓடுகள் போடப்பட்டுள்ளன.
அந்தக் காலத்தில் தெருவில் நடைசாரியாகவும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்வோர் இளைப்பாறிச் செல்ல இந்த் மடம் உதவியாக இருந்தது. இந்த தெருமூடி மடத்தின் தெற்குப் பக்கச் சுவரில் வாசலிடப்பட்டு கதவும் இருக்கிறது. இவ்வாசல் தெற்குப் புறமாக இருந்த பிராமணரின் வீட்டுடன் தொடர்புடையதாக இருந்துள்ளது.
இராக்காலத்தில் இம்மடத்து திண்ணையில் தங்கிச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு சாப்பாட்டு வசதிகளை செய்து கொடுக்க பிராமணர் இந்த வாசலைப்பயன்படுத்தினார். இந்த வீட்டில் பிராமணரால் சமஸ்கிருத வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தெருமூடிமடத்தின் அருகில் இருக்கும் சிவன் கோவில் வீதிக்கிணறு, தண்ணீர்த் தொட்டி, ஆவுரோஞ்சிக்கல் என்பன மனிதர் குளிக்கவும், குடிக்கவும் தொட்டிகளில் வண்டி மாடுகள் தண்ணீர் குடிக்கவும், ஆவுரோஞ்சிக்கல்லில் மாடுகள் உரசி நமைச்சலைப் போக்கவும் மிகவும் கருணையோடு அமைக்கப்பட்டிருந்தன..!
- தேனு தேனுஷன் (Thenu Thenushan)