சத்ரபதி சிவாஜி முடிசூடிய நாளை ஹிந்து சாம்ராஜ்ய தினமாக கொண்டாடுகிறோம்.
தன்மானத்தின் சின்னம் சத்ரபதி சிவாஜி. பாரத தேசத்தின் தன்மானத்திற்கு பட்டாபிஷேகம் நடந்த நாள் ஜூன் 23. இந்தியர்கள் அனைவருக்கும் வீர சிவாஜியின் வாழ்க்கை காலை எழுந்ததும் நினைவு கொள்ள வேண்டிய புனித வரலாறு.
‘சத்ரபதி சிவாஜி பிறந்திருக்காவிட்டால் காசி காபாவாக மாறியிருக்கும்’ என்றார் ஒரு வரலாற்றாசிரியர். பாரத தேசம் விடுதலை பெற்று 74 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அரசியல் கலாச்சாரம் இலக்கியம் பொருளாதாரம் என்று எதிலுமே நிறைவடையாமல் இருக்கிறோம். இவ்வாறு தற்காலச் சூழல் இருப்பதற்கு காரணம் “நானே!” என்று ஒவ்வொருவரும் எண்ணி வெட்கி விழுமியங்களோடு கூடிய பாரதிய புனரமைப்புக்கு முயல வேண்டும்.
ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவன் வீர சிவாஜி. ஆனால் அந்த மகத்தான சக்தியைப் பெற்றெடுத்து வீரத்தை ஊட்டி வளர்த்த ஜீஜாபாயே அனைத்து பெருமைக்கும் காரணம். இந்த நன்னாளில் வீரத்தாய் ஜீஜாபாய் பற்றியும் சற்று சிந்திப்போம்.
வீர சிவாஜியை ஈன்றெடுத்த ஜீஜாபாய் ஷாஜி போன்ஸ்லே:– (12, ஜனவரி 1598 – 17, ஜூன் 1674)
முகலாயர்களின் நிரந்தர படையெடுப்புகளால் ஹிந்து சமூகம் பரிதவித்து வீரியமற்றுக் கிடந்தது. அலட்சியமும் அவநம்பிக்கையும் நிறைந்திருந்த ஹிந்து சமுதாயத்தின் இருப்பிற்கு ஒளியூட்டி தன்னிடமிருந்த தேச பக்தியால் மீண்டும் உயிர்ப்பூட்டி உற்சாகமூட்டிய பெண் பதினேழாம் நூற்றாண்டில் பிறந்த ராணி ஜீஜாபாய்.
ஹைந்தவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்து வெற்றி கண்டனர் தாயும் மகனும். அவதார புருஷனாகவே பாரதியர்களால் போற்றப்படுகிறான் சத்ரபதி சிவாஜி. அத்தகைய மகா சக்தி ஏற்றம் பெறுவதற்கு காரணமாக இருந்தவள் அன்னை ஜீஜாபாய். சிவாஜியின் பிராண சக்தியாக அவனுடன் என்றென்றும் துணை நின்ற பெண் தெய்வம் அவனைப் பெற்ற ஜீஜாபாய். அவளுடைய வீரம் மிக்க விரதத்தால் கிடைத்த ஆற்றலே சிவாஜியை ‘சத்ரபதி வீரசிவாஜி’ யாக உருவாக்கியது.
எல்லா பெற்றோரும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பர். அது இயல்பே. ஆனால் சிவாஜி போன்ற சிறந்த புதல்வனைப் பெற்றவள் ஜீஜாபாய். உலக வரலாற்றிலேயே ஜீஜாபாய் போன்ற ஒரு தாயைப் பார்ப்பது அரிது. உன்னதமான புரட்சி மிக்க தன் எண்ணங்களைத் தன் மகனிடம் ஊட்டி வளர்த்தாள் ஜீஜா. தான் சாதிக்க நினைத்த ஸ்வராஜ்யத்தை தன் மகன் மூலம் சாதித்த அற்புதமான பெண்மணி ஜீஜாபாய். ஒவ்வொரு தாயும் ஜீஜாபாய் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்காட்டாக கொண்டு தம் புதல்வர்களை வளர்க்க வேண்டும்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்