பன்னாட்டுக் கைம்பெண்கள் தினம்
உலக அளவில் பல தினங்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. சிறப்பு தினங்கள் சில செய்திகளை மக்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றன என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை !
இன்று ஜூன் 23 ஆம் நாள் “சர்வ தேச விதவைகள் தினம் “ அல்லது “பன்னாட்டு கைம்பெண்கள் தினம் “ என அனுசரிக்கப்படுகிறது. இது கொண்டாட்ட தினமா ? இல்லை. அனுசரிப்பு தினம் !
விதவைகளின் நிலை, நிலைப்பாடு, சமூகக் கட்டுப்பாடுகள், உணர்வு ரீதியான விளைவுகள், பொருளாதாரம், உணவு மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் பற்றிய சிந்தனைகளை அனைவரிடமும் இந்த நாள் கொண்டு சேர்க்கிறது.
யார் தொடங்கினார்கள் ?
முதன்முதலில், தி லூம்பா ஃபௌண்டேஷன் சார்பில், 2005 ஆம் ஆண்டில், ஜூன் 23 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு,ஜூன் 23 ஆம் நாள் அன்று தான், திருமதி புஷ்பவதி லூம்பா ( தி லூம்பா அறக்கட்டளையின் நிறுவனத்தலைவரின் அன்னை ) விதவையான நாள் ! அதனை நினைவு கூரும் விதமாக ஜூன் 23 ஆம் நாளை விதவைகள் தினமாக அனுசரித்தது தி லூம்பா அறக்கட்டளை !
விதவைகளின் நிலை குறித்து ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை அந்த அறக்கட்டளை 2010 ஆம் ஆண்டு நடத்தியது. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. “கண்ணுக்குப் புலப்படாத, மறக்கப்பட்ட இன்ன்லுற்றோர்” என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
ஐ.நா தீர்மானம்
உலக அளவில், பல நாடுகளிலும், விதவைகள் படும் இன்னல்கள் குறித்து ஐ.நா சபையிலும் விவாதங்கள் நடந்தன.
21 டிசம்பர் 2010 அன்று, காபூன் அதிபர், பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கையை ஏற்று,ஐ.நா பொது சபையில் ,”ஜூன் 23 ஆம் நாள், சர்வதேச விதவைகள் தினம்” அனுசரிக்கப்படும் என்ற தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றியது. உறுப்பு நாடுகள் , தங்கள் நாட்டில், விதவைகள் வாழ்வாதாரம், சமூக அந்தஸ்த்து போன்றவற்றை சீரமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தது.
இந்த ஆண்டின் கருப்பொருள் :
“கண்ணுக்குப் புலப்படாத பெண்கள், கண்ணுக்குப் புலப்படாத இன்னல்கள்” ( Invisible Women, Invisible Problems ) என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது இன்றைய சர்வதேச விதவைகள் தினம் !
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே இன்னலுற்றுத் தவிக்கும் இந்நாட்களில், திடீரென தன் வாழ்க்கைத் துணையை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை மிகவும் கவலைக்குரியது !
அவர்களுக்கான வாழ்வாதாரம் என்ன ? நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான வசதிகள் பெற்ருள்ளார்களா ? அவர்களின் பிள்ளைகளின் உணவு, மருத்துவம் மற்றும் கல்விக்கான ஆதார வசதி உள்ளதா போன்ற கேள்விகளை முன் வைக்கிறது இன்றைய தினம் !
இந்தியாவில் விதவைகளின் நிலை
புராணக் கதைகளிலும், பழைய வரலாறுகளிலும் பெண்கள் அல்லது விதவைகள் ஒடுக்கப்பட்டதாக செய்திகள் இல்லாவிட்டாலும், கால மாறுதல்களுக்கு ஏற்ப, பெண்களுக்கான கல்வியும், அங்கிகாரமும் குறைந்து போனது.
நாடு போற்றும் நற்காரிகைகளான ஜான்ஸி ராணி, வேலு நாச்சியார், அன்னை ஜீஜாபாய் போன்றோரின் வீர தீர வரலாறுகள் நம்மை எழுச்சி அடையச் செய்யுமே !
கால மாற்றத்தால் ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலையை மாற்ற ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்த்ர வித்யாசாகர் போன்றோர் அயராது பாடுபட்டனர். அத்தகைய பெரியோர்களின் முயற்சியால், இந்தியாவில் பெண்கள் கல்வி மேம்பட்டது.
இந்தியாவில், 1856ஆம் ஆண்டு,விதவைகள் மறுமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது. டல்ஹௌசி பிரபு இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு, மிக முக்கிய காரணமாக இருந்தவர், ஈஸ்வர் சந்த்ர வித்யாசாகர் ! இந்தியாவில், விதவைகளுக்கான சொத்துரிமையும் நிலை நாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் எண்ணற்ற சமூகங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா சமூகத்தவரும், இனத்தவரும், மதத்தவரும், விதவைகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறார்களா என்பதை அவ்வவ்போது ஆய்வு செய்ய வேண்டும் !
சமூகச் சூழல்
இன்றைய சூழலில், பெரும்பாலான பெண்கள் கல்வி கற்று, பணியிலும் இருக்கிறார்கள். எனவே, விதவைகளுக்கான வாழ்வாதாரம் உணவு, மருத்துவம் போன்றவை குறித்து நல்ல விழிப்புணர்வு இருக்கிறது எனவே சொல்ல வேண்டும். அரசும், தொண்டு நிறுவனங்களும் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றன.
இருப்பினும், வாழ்க்கைத் துணையை இழந்த பெண்ணை இரண்டாந்தர பிரஜையாக பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை. மங்கலப் பொருள்களைத் தரிக்காமல் இருப்பது, மங்கல நிகழ்வுகளில் முன்னின்று செயல்படுவது போன்றவற்றை சமூகம் அங்கிகரிப்பதில்லை ! அந்தப் பெண்களே ஒதுங்கி இருக்கும் மனோநிலையில் இருக்கிறார்கள் !
அதே சமயம், மறுமணம் செய்து கொள்ளும் இளம்பெண்களை வரவேற்று அங்கிகாரம் அளிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
கொரோனாவின் தாண்டவம்
கொரோனாவின் பாதிப்பில் வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை விரைவாக, எவ்வித தடையுமின்றி பெற்றிட வகை செய்வதே சர்வதேச விதவைகள் தினத்தை அனுசரிக்கும் விதமாகட்டும் !
கட்டுரை : – கமலா முரளி
Nice content.