திருப்புகழ் கதைகள் பகுதி 86
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
களபம் ஒழுகிய – திருச்செந்தூர்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-2
இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றன. இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறார். மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.
இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பான்சுரி வகையாகும். இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும். குழலை இசைக்கும்பொது விரலால் மூடி மூடித் திறப்பதால் இவை விரல் துளைகள் எனாழைக்கப்படுகின்றன. வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு பான்சுரி குழல்கள் பயன்படுகின்றன.
மற்றொரு வகை வேணு. இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும். தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அருணகிரியார் தனது திருப்புகழில் விரல்சேரேழ் துளைகள் விடுகழை எனப் பாடியுள்ளார்.
சீனப் புல்லாங்குழல்கள் மற்றொரு வகை. இவை டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6இல் இருந்து 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன.
ஜப்பானியப் புல்லாங்குழல்கள் ஜப்பானிய மொழியில் பியூ என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்க்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங்குழல்கள் ஜப்பானில் காணப்படுகின்றன. இவை சோடினா மற்றும் சுலிங் என முறையே பெயர் கொண்டவை.
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் “மரத்தினால்” செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி
புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும் நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.
புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த பிரபல புல்லாங்குழல் மேதைகள் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, மாலி என அழைக்கப்பட்ட டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். நவநீதம், என். ரமணி ஆவர். இந்திய அளவில் ஹரிபிரசாத் சௌராசியா, ராகேஷ் சௌராசியா, ஷஷாங்க் சுப்ரமணி ஆகியோர் முக்கியமானவர்கள்.