எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்தலாம் என்பதை ‘நேர்மை’ குறைந்துவிட்டிருக்கும் தமிழ்நாட்டில் நேரடியாகப் பார்த்து வருகிறோம். தற்போது புதுச் சொல்லாக, ‘விடியல்’ தலை காட்டியிருப்பதால், கட்சியினருக்காக விடியல் வகுப்பு எடுத்திருக்கிறார் ஒரு நடத்துனர்.
பொதுவாக, அரசு பஸ்களில் பயணச் சீட்டு வாங்கினார்களா இல்லையா என்பதை கண்காணிக்க பரிசோதகர்கள் வருவதுண்டு. சில நடத்துனர்கள் அறியாமலோ அல்லது நேர நெருக்கடி காரணத்தாலோ சில தவறுகளை செய்துவிடுவதுண்டு. ஆனால் அவர்களும் கூட கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகிவிடுவர்.
இங்கே ஒரு நடத்துனர் வேண்டுமென்றே செய்த கோல்மால் வேலை இப்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. சேலத்தில் அரசு பஸ்ஸில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பயணச்சீட்டை, அது குறித்த விவரம் அறியாத வட மாநிலத்தவருக்குக் கொடுத்து, அதற்கு கட்டணம் வசூல் செய்துள்ளார் அரசு பஸ் நடத்துனர் ஒருவர்.
தமிழகத்தில் திமுக., ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த ஒரு விஷயத்தை நிறைவேற்ற, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தது அரசு. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது பெண்கள் இலவசமாக அரசு நகர பஸ்களில் பயணித்து வருகின்றனர். தொடக்கத்தில் எந்த வித கட்டுப்பாடும் இன்றி, எங்கே வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பெண்கள் பயணிக்கலாம் என்று இருந்ததால், பலர் வீடுகளில் பொழுது போகாமல் இருந்த நிலையில், ஊர் சுற்றவும், ஷாப்பிங் செய்யவும் என்று நகர பஸ்களில் முண்டியடித்தனர். இதனால் இப்போது ஒரு புதிய அறிவிப்பைச் செய்து செயல்படுத்தி வருகிறது அரசு. அதன்படி, பயணம் செய்யும் பெண்களுக்கு என தனியாக இலவச பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
ஓரிரு நாட்களுக்கு முன், சேலம் ரயில் நிலையத்திலிருந்து பழைய பஸ் ஸ்டாண்டு செல்லும் அரசு பஸ்ஸில் வடமாநிலத்தைச் சேர்ந்த 26 பேர் ஏறியுள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டைக் கொடுத்துள்ள நடத்துனர் நவீன் குமார், நவீன முறையில் முறைகேட்டை அமல்படுத்தி கட்சியினருக்கு வாத்தியாராக மாறியுள்ளார். இலவச பயணச் சீட்டைக் கொடுத்து அவர்களிடம் அதற்கான கட்டணத்தை வசூலித்துள்ளார். அதாவது அவர் கணக்குப் படி, அவர்கள் எல்லாம் பெண்கள்! இலவச பயணம் செய்கிறார்கள்!
அந்த பஸ், ஐந்து ரோடு அருகே வந்த போது அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள், டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், வடமாநில ஆண்களிடம் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளனர். உடனடியாக அந்த பஸ்ஸில் பயணித்த மற்ற பயணிகளை பஸ்ஸில் இருந்து இறங்கி வேறு பஸ்ஸில் அனுப்பிவைத்து விட்டு, விசாரணை செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வடமாநிலத்தவர் மற்றும் நடத்துனர் நவீன் குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை ஆண் பயணிகளுக்கு கொடுத்து முறைகேடாக நடத்துனர் நவீன்குமார் கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. இதை அடுத்து நவீன வசூல் நாயகர், விடியல் வழிகாட்டி, நடத்துனர் நவீன்குமார் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இது போக்குவரத்துத் துறை பணியாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.