― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்மூன்றினுள் எட்டெழுத்து பிரதானம்!

மூன்றினுள் எட்டெழுத்து பிரதானம்!

- Advertisement -

-> மகர சடகோபன், தென்திருப்பேரை

ஆழ்வார் அனைத்து அவதாரங்களையும் திருவோண நக்ஷத்திரத்துடன் இணைத்து பாசுரம் பாடியதைக் கொண்டு, திருவோணம் நக்ஷத்திர பெருமையை அறிந்தோம். அனைத்து அவதாரங்களும், அனைத்து திவ்ய தேச எம்பெருமான்களும், மூல மூர்த்தி “ ஶ்ரீமந் நாராயணன்” வேறல்ல என்பதனையும் அறிந்தோம். ஆதலால் தான் ஆழ்வார்கள் ஶ்ரீமந் நாராயணன் திருநக்ஷத்திரமான திருவோணத்துடன் இணைத்து பாசுரம் பாடியிருக்கிறார்கள் என்று “ திருவோணத்தான் உலகாளும் என்பாரே” என்ற கட்டுரையில் பார்த்தோம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கஓணம் சிறப்புக் கட்டுரை: திருவோணத்தான் உலகாளும் என்பாரே!

பகவானுக்கு எண்ணற்ற நாமங்கள் இருந்தாலும், சகஸ்ர நாமத்துடன் அழைக்கப்பட்டாலும், நாமத்தில் நாராயணன் நாமம் ஏற்றம் என்பதனை ஆண்டாள் தனது நாச்சியார் திருமொழியில் “ நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே” என்று பாடியுள்ளார்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 108 ஸ்லோகம் “ வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஶ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோ பிரக்ஷது” . வனமாலைகளை தரித்துக் கொண்டு பஞ்ச ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஶ்ரீ மஹா லெக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், விஷ்ணு வாஸூதேவன் என்ற நாமங்களுடன் காப்பாற்றுவாராக என்று கூறும் பொழுது, நாராயணன் நாமத்தின் பெருமை இந்த ஸ்லோகத்தின் மூலம் அறியப்படும். வ்யாபக நாமங்களான மூன்று நாமங்கள் இங்கே குறிப்பிடப்படுகிறது, அதாவது நாராயண, விஷ்ணு, வாஸூதேவ என்ற நாமங்கள் .

இந்த மூன்று நாமங்களில் வ்யாபகத் தன்மை இருப்பதை அதாவது எங்கும் நிறைந்திருக்கும் தன்மை இருப்பதை அறியமுடிகிறது.

இந்த மூன்று வ்யாபக நாமங்களின் பெருமையை, ஸ்வாமி பிள்ளைலோகச் சாரியார் என்ற ஆசாரியாரின் வாக்குக்கொண்டு அறிய முயல்வோம். ஸ்வாமி பிள்ளைலோகச்சாரியார், ஸ்வாமி இராமானுஜருக்குப் பிறகு வந்த ஆசாரியர்களில் ஒருவர், மொகலாய படையெடுப்பின் பொழுது திருவரங்கத்தையும், திருவரங்க நாதனையும் தள்ளாத தனது 103 வயதில் காப்பாற்றிய மிகச்சிறந்த வைணவ ஆசாரியார். அவர் 18 ரகசிய க்ரந்தங்களை இயற்றியுள்ளார். அதில் ஒன்று முமுக்ஷூப்படி, முமுக்ஷூ என்றால் மோக்ஷத்தில் இச்சையுள்ளவன் என்று பொருள்.

முமுக்ஷூப்படி என்ற 278 சூரணைகளைக் கொண்ட அற்புதமான ரகசிய க்ரந்தத்தை இயற்றியுள்ளார். அதில் திருமந்திர ப்ரகரணம் என்று 115 சூரணைகள் உள்ளன.

மேற்கூறிய வ்யாபக நாமங்களின் பெருமையைச் சூரணை 10ல் “அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள்” என்று குறிப்பிடுகிறார்.

விஷ்ணு காயத்ரி மந்திரத்தில், மூன்று வ்யாபக நாம சப்தங்கள் ஸ்ரேஷ்டமாய் இருப்பதையும் பார்க்கலாம்.

“ஓம் நாராயணாய வித்மஹே | வாசுதேவாய தீமஹி|
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் ||”

அதில் 11 வது சூரணையில் “ இவை மூன்றிலும் வைத்துக்கொண்டு பெரிய திருமந்திரம் ப்ராதநம்” என்று இந்த மூன்று வ்யாபக நாமங்களைக் கொண்டு அமைக்கப்படும் மந்திரங்களில் “ ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து திருமந்திரம் பிரதானம் என்று குறிப்பிடுகிறார்.

vishnu

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கடைசியில். “ஸங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த து:க்கா: ஸூகினோ பவந்து”. ஆயிரம் நாமங்களைச் சொன்னாலும், நாராயண என்ற சப்தம் எல்லா துக்கங்களையும் மறைத்து, சுகமாக வாழ வழிவகுக்க வல்லது என்பது பொருள்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் , 246 நாமம் – நாராயண: அழியாத நித்யமான சித் அசித் கூட்டத்திற்கு இருப்பிடமானவர்; அந்தர்யாமியானவர்.

247 நாமம் – நர: தன் உடைமையாகிய சித் அசித்துகளை அழியாமல் இருக்கப் பெற்றவர்.

மேற்கூறிய இரண்டு சப்தங்களிடமிருந்து தெளிவாகத் தெரிகிறது எல்லாப் பொருள்களுக்கும் உறைவிடமாக இருப்பது நாராயணன். அவனே மூலப்பொருள், மூலமூர்த்தி.

முமுக்ஷூப்படி 95 வது சூரணை “ நாராயணன் என்றது நாரங்களுக்கு அயநம் என்றபடி”

சூரணை 96 ல் “ நாரங்களாவன- நித்யவஸ்துகளுடைய திரள்” என்று மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும் வகையில் நாராயணன் சப்தம் அமைந்துள்ளதை ஸ்வாமி பிள்ளைலோகச்சாரியார் வாக்குக்கொண்டும் அறிந்து கொள்கிறோம்.

மந்திரங்களில் உயர்த்தி திருமந்திரம். திருமங்கை மன்னன் ஆழ்வாராக மாறுவதற்கு முன், திருமணங்கொல்லை என்ற இடத்தில், அரச மரத்தடியில் ( அஸ்வத்த நாராயணன்) திருவுடன் கூடிய திருமால் காட்சி கொடுத்து, திருமந்திரமான நாராயண நாமத்தை ஓதிவுரைத்து திருமங்கை ஆழ்வாராக மாற்றினார் எம்பெருமான். அந்த இடத்தை மூன்று அரசுகள், அதாவது அரசமரம், திருமங்கை அரசன், மந்திர அரசு திருமந்திரம் கூடிய இடம் என்று அழைப்பர். மூன்று நாரணன் அதாவது அஸ்வத்த நாராயன் என்ற அரசமரம், ஶ்ரீமந் நாராயணன், ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரம் கூடிய இடம்.

இந்த திருமணங்கொல்லை என்ற புண்ணிய பூமியைத் தரிசிக்கச்சென்ற ( மங்களாசாசனம் செய்ய) ஶ்ரீ மணவாள மாமுனிகள் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்”

எட்டெழுத்து திருமந்திரமான நாராயண நாமத்தின் பெருமையை ஆழ்வார்கள் ஈரச்சொற்கள் கொண்டு மேலும் அனுபவிப்போம் .

“ஶ்ரீ ஜெயந்தி வாழ்த்துகள்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version