குலப்பெருமைகளை, சாதிப்பெருமைகளை ஒதுக்கி மனிதநேயம் மிக்க சகோதரத்துவ-சமத்துவ உணர்வு மிக்க இந்துக்களாக உணர்வு பெற்று, உலக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைய இந்த தீபாவளி திருநாளில் சபதமேற்போம்.
உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள், புதிய தமிழகம் கட்சியினுடைய மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் புதிய தமிழகம் கட்சியை தனது உயிராக கருதக்கூடிய தாய்மார்கள் அனைவருக்கும் எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அமாவாசை என்று அழைக்கப்படும் புது நிலவின் (New Moon) துவக்க நாளே, ஒவ்வொருவரின் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி மிளிரும் நன்னாளாம்,
தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி திருநாளின் மூலமாக உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள் ஒருமுகப்படுத்தப் படுகிறார்கள்.
ஒவ்வொரு இந்து பண்டிகைகள் குறித்தும் கதைகள், கட்டுரைகள், புராணங்கள் என எது வேண்டுமானாலும் சொல்லலாம்.ஆனால், அந்த விழாக்களில் ஒரு உண்மையும், நியாயமும், மனித நேயமும் இலையோடி இருக்கும் என்பதே மெய்.
கல்வி,தொழில்,வணிகம் நிமித்தமாக குடும்பத்தில் உள்ளோர் தங்களுடைய இருப்பிடங்களை விட்டு விட்டு பல தேசங்களுக்கு செல்வது இன்று மட்டுமல்ல, தொன்று தொட்டு இருக்கக்கூடிய வழக்கம் ஆகும். இது மனித குலத்தில் மட்டும் தான் இருக்கிறது என்றும் கருத வேண்டியதில்லை. மிக குளிர்ந்த பிரதேசமான ரஷ்யாவின் வட பகுதியில் உள்ள சைபீரியாவில் இருந்தும் கூட ஏறக்குறைய 15,000 கி.மீ தூரம் பயணம் செய்து தமிழகத்தில் உள்ள வேடந்தாங்கலுக்கு வந்து இனப்பெருக்கம் செய்யும் பறவைகள், இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் தங்களது தேசங்களுக்கு செல்கின்றன.
அதேபோல, ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் விலங்கினங்கள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து இறை தேடிச்சென்று மீண்டும் தங்களது பூர்வீக இருப்பிடம் திரும்புகின்றன.
இவையெல்லாம் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய நிகழ்வுகளாகும்.
அந்த உயிரினங்கள் யாவும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையே அமைத்துக் கொள்கின்றன.
அதேபோன்று தான் தங்களுடைய குடும்பங்களைப் பிரிந்து சென்ற குடும்பத் தலைவன், பெற்றோர்களைப் பிரிந்து சென்ற பிள்ளைகள் அனைவருமே ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு அகம் மகிழ்ந்து இருக்கக்கூடிய நாட்களாக இது போன்ற பண்டிகைகள் விளங்குகிறது.
கடந்த காலங்களில் இயற்கையின் சீற்றத்தால், வெவ்வேறு இனக்குழுக்களின் தாக்குதலால் நிலைகுலைந்து போனவர்கள் மீண்டும் தங்களுடைய வாழ்க்கையை ஓரிடத்தில்
தொழிலாகவோ, வணிகமாகவோ துவங்குவது இதுபோன்ற புதுநிலவு நாட்களில் தான்.
உலக நாடுகளை போல இந்தியாவிலும் குலங்கள் (Clans) தோன்றியது. உலகளவில் குலங்கள் மறைந்து சமுதாயங்களாக மறுமலர்ச்சி அடைந்தது. தேசங்கள் மொழி வழியாக, இன வழியாக, நில வழியாக என எப்படி இருந்தாலும் அது ஆழ் மனது பிணைப்போடுதான் உருவாகின.
இந்தியாவில் மட்டும் குலங்கள் திட்டுத்திட்டாக நின்று போயின. பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஒன்றாக இருந்தாலும் கூட,
திட்டுக்கள் எல்லாம் ஒன்றாகி ஒரே உணர்வு கொண்ட ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக உணரமுடியுமால் போய்விட்டது.
ஏறக்குறைய 20,000 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட இந்திய தேசத்தில் 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் கூட அவர்கள் அனைவரும் மொழியாலும், சாதியாலும் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்களே தவிர தங்களது ஊணோடும், உயிரோடும் பிண்ணிப்பிணைந்த ‘இந்தியர்-இந்து’ என்ற ஒரே உணர்வில் இணைக்கப்படாததும், ஒன்றுபடுத்தப் படாததும்,அதன் வெளிப்பாடுகள் பிரதிபலிக்கப் படாததும் நமது பலத்தைக்காட்டிலும் பலவீனத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
உலகில் உள்ள எல்லா மதங்களிலும் நடக்கக்கூடிய விழாக்களில் அவர்களின் ஒற்றுமை பலப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 140 கோடி பேரின் இல்லங்களிலும் விண்ணை அதிர வைக்கும் பட்டாசுகள் வெடித்தாலும், ராக்கெட் பட்டாசுகள் உயர பரந்தாலும் அவைகள் யாவும் ஒரு நாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரின் இல்லங்களிலும் ஒரே விதமான மகிழ்ச்சி, குதூகலம் பொங்கிடும் என்று சொல்ல முடியாது.
‘பாரதநாடு பழம்பெரும் நாடு’ என்ற பெருமை மட்டுமே போதாது. 75 ஆண்டுகால சுதந்திரதின கொண்டாட்டங்கள் மட்டுமே போதாது. நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவில் வறுமை பட்டியலுக்குள் தள்ளப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சிகரமான செய்தி இல்லை. 140 கோடி இந்தியர்களில் 4 பேர் மட்டும் உலக பணக்காரர்களாக இருந்து என்ன பலன்?
ராமருக்கு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்பது உணர்வுப்பூர்வமானதாக இருக்கலாம்.
ஆனால், ‘பிச்சை இடுவோர் இல்லை. ஏனென்றால் பிச்சை கேட்போர் இல்லை’ என்பதற்கிணங்க எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விட்டது என்பது தானே மெய்யான ராமராஜ்ஜியம் ஆகும்.
உலகின் ஜனத்தொகையில் 6-ல் ஒரு பங்கு மக்களான இந்துக்கள் உள்ள இந்திய தேசத்தில் அனைத்து எல்லைகளிலும் பிற நாடுகளில் இருந்து தாக்குதலுக்கு ஆளாகிறார்கள், விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வுரிமையும், வழிபாட்டு உரிமையும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவில் நாம் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். ஆனால், நம் அண்டை நாடான பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள இந்துக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்து அச்சத்தோடு முகாம்களில் வாழ்கிறார்கள்.
ஒருநாள் ஒருமுறை ஓங்கி குரல் கொடுத்தாலே,
அந்த சத்தத்திலேயே இந்துக்களுக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளும் நாடியற்றுப் போய்விடும். ஆனால், நாம் அனைவரும் இந்துவாக ஒன்றிணைவோமா.? உணர்வு பெறுவோமா.?
எழுச்சி பெறுவோமா.? என்பதே இந்த தீபாவளி திருநாளில் உணர்வு பெற்ற அனைத்து இந்துக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
உலக இந்துக்களே.!
‘குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்பதற்கு இணங்க குலப்பெருமைகளை,
சாதிப்பெருமைகளை ஒதுக்கி மனிதநேயம் மிக்க சகோதரத்துவ-சமத்துவ உணர்வு மிக்க இந்துக்களாக உணர்வு பெற்று,
உலக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைய இந்த தீபாவளி திருநாளில் சபதமேற்போம்.
அனைவருக்கும் மீண்டொருமுறை எனது உளங்கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
- டாக்டர் க.கிருஷ்ணசாமி.MD.,
நிறுவனர்&தலைவர், புதிய தமிழகம் கட்சி