திருப்புகழ்க் கதைகள் 193
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன் –
குழல்கள் சரிய – பழநி
அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு -1
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிநாற்பத்தியெட்டாவது திருப்புகழ், ‘குழல்கள் சரிய’ எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “முருகா, மாதர் மயல் அற அருள் புரிவாய்”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
கொலைகள் செயவெ …… களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லோலிகள்
குமுற வளையி …… னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய …… மயில்போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் …… உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் …… அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி …… யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ …… முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – சுவை நிரம்பி ஒளிரும் கவிகளால் விளங்கும் அருணகிரி கூறும் வெற்றிமலை போன்ற புகழ்மாலையை அணிபவரே; மலம் அற்றவரும் மலத்தை அகற்றுபவரும், தூய்மையும், இளமையும், பொன்னிறமும் நல்ல பருவமும் உடையவரும், சுடலையில் நடனம் ஆடுபவருமாகிய பார்வதி பெற்ற பாலகரே; பழைமையான வேதத்தின் முடிவில் அகர உகர மகரங்களைக் கொண்ட ஓம் மந்திர உருவத்தை உடையவரே; நன்செய், புன்செய், பாக்கு, வாழை, பலா முதலியவை சூழும் பழநியம்பதியில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே. மகளிரின் மயக்கத்தில் அடியேன் (நொந்து) வீழ்ந்து அழியலாமோ? அழிதல் கூடாது. அதற்கு நீ எனக்கு அருள் புரிவாயாக.
இத்திருப்புகழில் அருணகிரியார் வார்த்தை விளையாடு விளையாடியிருக்கிறார். இதனை சமஸ்கிருதத்தில் பத லாலித்யம் என்று சொல்வார்கள். சமஸ்கிருதத்தில் தண்டி, காளிதாஸன், பாரவி, மாகன் ஆகியோரைப் பற்றிய கவிதை ஒன்று உண்டு.
உபமா காளிதா³ஸஸ்ய, பா⁴ரவேரர்த கௌரவம்ʼ |
தண்டின: பதலாலித்யம்ʼ , மாகே ஸந்தி த்ரயோ குணா: ||
उपमाकालिदासस्य, भारवेरर्थगौरवं |
दण्डिनः पदलालित्यं, माघे सन्ति त्रयो गुणाः ||
இதன் பொருள் என்னவெனில் – உவமையில் காளிதாசன்; பொதிந்த பொருளில் பாரவி; அழகிய சொற்களுக்கு தண்டி; மாகனிடம் இவை மூன்றும் உண்டு – என்பதாகும். இக்கவிதை பதலாலித்யம் பற்றிக் குறிப்பிடுகிறது. தமிழிலும் இத்தகைய கவிதைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
வஞ்சியேன் என்றுதன் ஊருரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் – வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்று உரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ
(யாப்பருங்கலக் காரிகை; பாடியவர்: அமுதசாகரர்)
குறிப்பிட்ட காலத்தில் திரும்புவதாகச் சொல்லிச் சென்ற காதலன் இன்னும் வரவில்லை. ஒருவேளை அவன் ஏமாற்றிவிட்டானோ என்கிற கவலையில் காதலி பாடும் பாடல் இது. வஞ்சிக் கொடி போன்ற என் தோழியே, நான் அவனை முதன்முறை பார்த்தபோது ‘வஞ்சியேன்’என்றான். உண்மையில் அவன் சொன்னது ‘நான் வஞ்சி (சேர) நாட்டைச் சேர்ந்தவன்’ என்ற அர்த்தத்தில். ஆனால் நான் அதை ‘வஞ்சியேன் – வஞ்சிக்கமாட்டேன்’ என்று புரிந்துகொண்டுவிட்டேன்.
அவன் என்னை ஏமாற்றமாட்டான் என்கிற நம்பிக்கையில் அவனையே திருமணம் செய்துகொள்வதாக வாக்குக் கொடுத்துவிட்டேன். வஞ்சி நாட்டைச் சேர்ந்த என் தலைவன், ‘வஞ்சியேன், வஞ்சியேன்’ என்று என்னிடம் பலமுறை சொன்னான். ஆனால் இப்போது இங்கே வரவில்லை. வார்த்தை தவறிவிட்டானோ? வஞ்சித்துவிட்டானோ?
இத்தகைய வார்த்தை விளையாட்டுக்கள் உள்ள பாடல்கள் பல தமிழில் உண்டு. அவை என்னென்ன? நாளை காணலாம்.