― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்!

திருப்புகழ் கதைகள்: ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்!

- Advertisement -
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 203
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம்-

குன்றும் குன்றும் – பழநி
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

கம்சன் வதத்திற்குப் பின்னர் ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் சாந்தீப முனிவர் ஆசிரமத்திற்கு கல்வி கற்கச் சென்றனர். குருதட்சனையாக குருவின் இறந்து போன மகனை இருவரும் மீட்டுக் கொடுத்தார்கள்.

கம்சனின் மரணத்தினை தாங்காது அவனது மனைவிகள் தமது தந்தை ஜராசந்தனிடம் அழுது புலம்ப அவன் கோபம் கொண்டு யாதவ குலத்தினையே அழித்துவிடுவதாக கூறி படை எடுத்து வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து செல்லும் போதும் மனம் தளராது மீண்டும் மீண்டும் வந்தான். இதனால் யாதவ குலத்தினை காக்க, ஸ்ரீகிருஷ்ணன் விஸ்வகர்மா மூலமாக துவாரகை எனும் பெரும் பட்டணத்தை நிர்மாணித்து அதில் யாதவர்களை குடியேற செய்தான்.

விதர்ப்பராஜாவின் மகளான ருக்மிணி, தனது தந்தை தன்னை சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்திருப்பதனை அறிந்து, தன்னை காப்பாறும்மாறு ஸ்ரீகிருஷ்ணருக்குத் தகவல் அனுப்ப, அவர் அவளை மீட்டு பின்னர் மணந்து கொண்டான். இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார். கிருஷ்ணன் மொத்தம் 16,108 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் அஷ்டபார்யா என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர்.

அவர்கள் ருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌, சம்பவதி, நாக்னஜிதி, காலிந்தி, மித்ரவிந்தா, பத்ரா, லக்ஷ்மணா ஆவர். பிற 16,100 பேர் அவரது சுதேசி மனைவிகள் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருஷ்ணர் ஒரே நாளில் மணந்தார். அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை நிறுத்தினார்.

navaneedha krishnan

கண்ணன் உபமன்யு முனிவரிடம் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டினார். அதற்கு உபமன்யு சிவபக்தியில் மூழ்கிநின்று, சிவபெருமானின் அருளைப் பெறுமாறு அறிவுரை வணங்கினார். கண்ணனும் கடுந்தவத்தினை மேற்கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தார். கண்ணனின் பாசுபத விரதத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தந்தார். கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார்.

தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அருச்சுனனுடன் நட்பு கொண்டார். அத்தை குந்திதேவி, கணவரை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் கஷ்டப்படுவதனை அறிந்து உதவிகள் புரிந்தார்.அவளது பிள்ளைகளான பாண்டவர்களுக்கு சேர வேண்டிய நாடு, நகரங்கள் எல்லாவற்றையும், துரியோதனன் வஞ்சகமாக, சூதாட்டம் மூலம் பறித்து கொண்டு, அவர்கள் மனைவி பாஞ்சாலியையும் மானபங்கம் செய்தான்.

அவர்கள் வனவாசம் சென்று வந்தால் நாடு, நகரங்கள் எல்லாவற்றையும் திருப்பி கொடுப்பதாக சொன்ன சொன்ன துரியோதனன் அவ்வாறு செய்யவில்லை. இது குறித்து தூது சென்ற கிருஷ்ணனையும் இழிவாக பேசினான். இதனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே குருட்சேத்திரப் போர் நடந்தது. இப்போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். போர் தொடங்கும் முன்னர் தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு, தன் விசுவரூபம் காட்டி பகவத் கீதையை உபதேசித்தார். பாரதப் போர் முடிவில் பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தினை ஆண்டு வந்தனர்.

கண்ணன் மற்றும் ஜாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சாம்பன் என்று பெயர். குருக்ஷேத்திரப் போர் முடிந்த பின், ஒரு நாள் சாம்பன் கர்ப்பிணி பெண் வேடமிட்டு நண்பர்கள் புடைசூழ, துவாரகைக்கு வந்திருந்த முனிவர்களிடம், தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாக கேட்க, அதற்கு உங்கள் குலத்தை அழிக்க உலக்கை ஒன்று பிறக்கும் என சாபமிட்டனர்.

அதே வேளையில் துவாரகையில், கிருஷ்ணன், பலராமன் இருப்பதனால் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என யாதவர்கள் இறுமாப்பு அடைந்து பெரும் அக்கிரமங்களில் ஈடுபட்டனர். கிருஷ்ணன், பலராமன் கூட அவர்களை அடக்க பெரும் சிரமப்பட்டனர். முனிவர்கள் கூறியவாறே இரும்பு உலக்கை சாம்பன் வயிற்றில் இருப்பதை கண்டு பயந்து அதனை பொடிப் பொடியாக்கி கடல் நீரில் கரைத்தனர். எஞ்சிய சிறிய துண்டையும் நீரில் எறிந்தனர். அந்த துண்டை மீன் ஒன்று விழுங்கி விட்டது.

அந்த மீன் ஒரு மீனவன் கையில் சிக்கி மீனை வெட்டும் போது அதன் வயிற்றில் இருந்த இரும்பை வீசி எறிய அது ஒரு வேடன் கையில் கிடைத்தது. அதனை அவன் ஒரு அம்பு நுனியில் பொருத்தினான். கடல் நீரில் கரைந்த பொடிகள், கரையில் இரும்பு கோரைப்புற்களாக வளர்ந்து இருந்தன. ஒரு சமயத்தில் பெரும் போதை மயக்கத்தில் இருந்த யாதவர்கள் கோரைகளை பிடுங்கி தமக்கிடையே சண்டையிட்டு இறந்து போயினர். பலராமனும் அக்கடற்கரையினில் அமர்ந்து தன் சரீரத்தினை விடுத்து வைகுண்டம் சென்றார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவர் வேண்டுதலுக்கு ஏற்ப அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர். ஜரா எனும் வேடுவனின் அம்பால் தாக்கப்பட்ட கிருஷ்ணர், தனது அவதாரப் பணியை முடித்து வைகுண்டம் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version