-> ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தெட்
போகிக்கு முன்பே தொடங்கும் உற்சாகம்! தோழிகள் படைசூட படையெடுப்போம் கடைகளுக்கு! சில்லறைக் காசுகளிலேயே முடிந்து விடும் எங்கள் ஷாப்பிங்!
ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் அதில் தான் எவ்வளவு மகிழ்ச்சி இருந்தது?! அது, பொங்கலுக்கான வாழ்த்து அட்டைகளை பார்த்து பார்த்து வாங்குவது ஆயிற்றே! அதுவும் சில்லறைக் காசுகளிலேயே அந்த மகிழ்ச்சியை நாங்கள் வாங்கி விடுவோமே.
50 பைசாவிலிருந்து 20 ரூபாய் வரை பல காட்சிகளைத் தாங்கிய பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி வருவோம், நாங்கள். இயற்கை காட்சிகள், விவசாயிகள் நிலத்தில் வேலை செய்வது போன்ற படங்கள், பொங்கல் பானை, கரும்பு, கிராமீயம் முதலியன காட்சிகள் பொங்கல் வாழ்த்து அட்டைகளில் அச்சிடப்பட்டு இருக்கும்.
உயிர்த்தோழிகளுக்கும், உடன்பிறவா சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும் அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறான பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்குவோம்.
வாங்கிய வாழ்த்து அட்டைகளில் முன் பக்கத்தில் அருமையான சீன்களும், அற்புதமான வாழ்த்து சொற்களும் அச்சடிக்கப்பட்டு இருக்கும். பின் அட்டையில் தோழியர்களின் விலாசத்தை அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்த்துப் பார்த்து அழகான கையெழுத்தினால் எழுதி, தபால் அலுவலகம் செல்வோம். அங்கு நீண்ட வரிசையில் எங்களைப் போன்ற சிறுவர்கள், சிறுமியர்கள் கைகளில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருப்பர்.
அடுத்தவர் நம் கைகளில் இருக்கும் அட்டைகளைப் பார்த்து விடாதவாறு க்யூவில் நிற்கும் போது எங்கள் கைகளிலேயே மறைத்து வைத்துக் கொள்வோம்.
அங்கு கௌண்டரை(Counter) நெருங்கி, ஸ்டாம்புகளை வாங்கிக் கொண்டு நீல பாட்டிலில் அல்லது ஒரு கிண்ணத்தில் ஒரு குச்சிப் போட்டு வைக்கப்பட்டிருக்கும் கோந்து டப்பா வைக்கப்பட்டு இருக்கும். அங்கும் அதே அளவிலான கூட்டம் அலை மோதும்.
எங்கள் முறை வரும் போது கோந்து காலியாகி விடும். அப்போது, பெரியவர்கள் எங்களில் ஒருவரை “பாப்பா, அங்கே அந்த கௌண்டரில் இருக்கும் ஐயாகிட்டேயிருந்து கோந்து வாங்கிட்டு வாம்மா,” என்பார். நாங்களும் உடனே காலி கோந்து டப்பாவில் கோந்து நிரப்பி எடுத்து வருவோம். எடுத்து வந்த கோந்தை ஸ்டாம்பில் தடவி பொங்கல் வாழ்த்து அட்டைகளில் அதற்காக ஒதுக்கப்பட்ட சதுர இடத்தில் ஒட்டி பொங்கல் வாழ்த்து அட்டைகளை போஸ்ட் பாக்ஸில் போட்டுவிட்டு திருப்தியுடன் வீடு திரும்புவோம்.
அவ்வாறே, தபால்காரர் எங்கள் தெருவில் திரும்பியவுடனே, அவரது சைக்கிளின் மணி ஒலியைக் கேட்டவுடனேயே நாங்கள் எங்கு விளையாடிக் கொண்டிருந்தாலும் அவரவர் வீட்டினில் ஆஜராகி விடுவோம்.
தபால்காரர் எங்கள் பெயரை அழைக்கும் போது அவ்வளவு பெருமையாய் இருக்கும். எங்கள் பெயருக்கு வாழ்த்து அட்டை வந்துருக்கிறதே என்று. பின்னர், ஒருவருக்கு எத்தனை பொங்கல் வாழ்த்து அட்டைகள் வந்ததென்று கணக்கும் எடுப்போம்.
நிறைய பொங்கல் வாழ்த்து அட்டைகள் வரப் பெற்றவர்கள் மிகவும் செருக்காக வலம் வருவாம், அந்த பொன்னான நாட்களில்.
இப்போது நாம் நவீனத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறோம் இந்த நவீனங்கள் எந்தவித சிரத்தையும் நமக்கு கொடுக்காமல் மகிழ்ச்சியை தருவது போல் போக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன.
வாழ்வியல் நடைமுறை மாறி விட்டது. தற்போது பொங்கல் வாழ்த்து அட்டைகளும் விலாசம் தெரியாமல் போய்விட்டனவோ என நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் மனதில் பொங்கல் வாழ்த்து அட்டைகளுக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு என்பதே உண்மை