திருவனந்தபுரம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய, ‘எமர்ஜென்சி பவர் பேங்க்’ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தற்போதைய உடனடி தேவை, தகவல் தொடர்பு வசதி. ஆனால், வெள்ளத்தால் வீடுகள் சூழப்பட்டுள்ளதால், மின்சாரம் துண்டிக்கப் பட்டு, வீடுகளில் வசிக்கும் மக்களின் மொபைல் போன்கள், ‘சார்ஜ்’ இல்லாமல் செயல் இழந்து விட்டன.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மெக்கானிக்கல் மாணவர்கள், ‘இன்ஸ்பையர்’ என்ற பெயரில் நடத்தி வரும் குழு மூலம் எமர்ஜென்சி பவர் பேங்க் தயாரித்து, விநியோகித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, இந்த பவர் பேங்குகளை ஹெலிகாப்டர்களில் இருந்து பாதிக்கப் பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் வீசியுள்ளனர். அவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். மிகவும் சிரமமான சூழலில், இது மிகப் பெரும் உதவியாக உள்ளது என மக்கள் கூறியுள்ளனர்.
முதலாண்டு பயிலும் பொறியியல் மாணவர் ஆதித்யா எஸ்.குமார் இது குறித்துக் குறிப்பிட்ட போது, இது எட்டு ஏஏ பேட்டரிகளால் உருவாக்கப் படும். இரு காட்ரெட்ஜ்களாக பிரித்து, ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு ஏஏ பேட்டரிகளை இணைத்து, பின் இரு காட்ரிட்ஜ்களையும் இணைத்து கவர் செய்து, சார்ஜ் பின்னுடன் சேர்த்து தயாரித்து விடுகிறோம்.
இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும். 10-15 சதவீதம் அதில் சார்ஜ் ஏறும். அது சுமார் 1 மணி நேரத்துக்கு தாக்குப் பிடிக்கும். அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ள இயலும். இதனை இந்த அவசர காலத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்த எண்ணினால் அது செல்போனை பாதிக்கக் கூடும் என்று எச்சரித்தார்.
பொறியியல் மாணவர்கள் குழுக்களாக இணைந்து 300 பவர் பேங்க்களை அரசுக்கு ஒப்படைத்தனர். அவை நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், கேட்ரிட்ஜ் தட்டுப்பாட்டால், அதிக அளவிலான பவர் பேங்குகளை தயாரிக்க முடியவில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.