இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின் சுயசரிதையை படித்தோம் என்றால் அவர்களிடத்தில் தலைகனம் ( EGO) என்ற குணமே இருக்காது.
தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி, தன் கீழ்நிலை பணியாளர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்க மாட்டார்கள்.
சிவா ஒரு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்கிறான்..
ஒரு நாள் மாலை வேலை முடியும் தறுவாயில் இறைச்சி பதப்படுத்தும் குளிர்சாத( Freezer ) அறைக்குள் எதோ வேலையாக இருந்தபோது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக் கொண்டுவிட்டது.
உடனே பெரும் கூச்சலிட்டான் சிவா…. உள்ளிருந்து அவன் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பி விட்டனர்…
இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தான் சிவா…. அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தான்..
தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார்….. மகிழ்ச்சியில் அவரை கட்டி தழுவிக் கொண்டான்….
அவரிடம், “நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட்டான்.
“சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்…நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும், சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..
ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில்விழவில்லை … உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்… அப்போதான் உங்களை கண்டு பிடிச்சேன் .” என்றார்..
ஆம்.,நண்பர்களே..,.
ஒருவருக்கொருவர் மற்றவர்களை தன்னைவிட கீழ் நிலையில் உள்ளவர் என்று தரக் குறைவாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மரியாதை
(அன்பு) செலுத்திக் கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்..
சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து உங்களை பெரிதும் விரும்ப செய்யும்.
ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும்போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை…
- அன்புடன் தோழர் கற்பகராஜ்