இன்றைய சிந்தனைக்கு… ”மனதை விசாலமாக்குங்கள்”..
புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான்.
வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான்.அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:
சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல்.
என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம். ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை.
என் மனது மிகவும் பலவீனமாகப் போய் விட்டது. எனக்கு ஏதாவது ஒரு நல்வழி சொல்லுங்கள் என்றான்…
புத்தர் அன்புடன் அவன் கையில் தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார்.பிறகு உப்பையும் கொடுத்து விட்டுச் சொன்னார்:
சகோதரா, இந்தச் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அதை அருந்து. என்றார்..
அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது. மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கீழே வைத்து விட்டுச் சொன்னான்:
என்னால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை .மிகவும் கரிக்கிறது.”
புத்தர் மீண்டும் இதோ இப்போதும் அதே அளவு உப்பைத் தருகிறேன். இதை நீ எதிரில் இருக்கும் அதோ அந்தக் குளத்தில் கரைத்து விடு!”
புத்தர் சொன்னபடியே அவன் அந்த உப்பை எதிரில் இருந்த குளத்தில் கரைத்தான். இப்போது அந்தக் குளத்து நீரைக் குடித்துப் பார் என்றார்
உப்புக் கரைக்கப்பட்ட போதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை.
அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்து விட்டுக் கரைக்கு வந்தான்.
அப்போது அந்த இளைஞனைப் பார்த்து புத்தர் சொன்னார்,
நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும், பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்பு தான்.
ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம் தான் இருந்தது. அதனால் தான் கரிப்புச் சுவை அதிகமாக இருந்தது. எனவே உன்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.
ஆனால் இதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்பட்டு இருந்தாலும், அந்த நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை..
நம் துன்ப துயரங்கள் என்பவை உப்பைப் போலத் தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்து கொண்டே இருக்கும்.
இவற்றைத் தவிர்க்கவே முடியாது.ஆனால் நம்மால் நம் மனதை விசாலமாக்க முடியும்.
இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையைப் போல் தான் இருக்கிறது.
அதனால் தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு இந்தளவு துயரமளிக்கின்றன என்றார்..
ஆம்.,நண்பர்களே.., நாம் நிறைய அறிவும், அனுபவங்களும் பெற்று நமது மனதைப் பெரிதாக்க வேண்டும்.. அதை வலுப்படுத்த வேண்டும்..
அப்போது தான் நமது துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப் போலக் காணாமல் போய் விடும்.
- அன்புடன் தோழர் கற்பகராஜ்
-கல்வி பாலம் -தினசரி. காம்