வாழ்நாள் தடை விதித்து விடலாமா? கிரிக்கெட்டின் புனிதத்தைக் கொன்றுவிட்டார் என்று கொலைக்குற்றம் சாட்டி, ஆயுள்தண்டனையோ அல்லது தூக்குத்தண்டனையோ வாங்கிக் கொடுத்துவிடலாமா? அல்லது மொட்டையடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேல் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தலாமா?
போய் பொழப்பைப் பாருங்கடா நொண்ணைகளா!
முகமது –பின் – துக்ளக் நாடகத்தில் சோ இப்படியொரு வசனம் எழுதியிருப்பார்.
“கட்டிய மனைவியைப் பிரிவது சட்டவிரோதமாக இருந்தது; விவாகரத்து மூலம் அதைச் சட்டரீதியாக்கினார்கள். கள்ள மார்க்கெட் வியாபாரம் செய்வது சட்டவிரோதமாக இருந்தது; ரேஷன் முறையினால் அதை சட்டரீதியாக்கினார்கள். பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது சட்டவிரோதமாக இருந்தது; தேர்தல் மூலம் அதையும் சட்டரீதியாக்கினார்கள். What was illegal yesterday is legal today. What is legal today will be illegal tomorrow. “
சரிதானே?
Bodyline அன்றைக்குச் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்றைக்கு எத்தனை மேட்சுகளில் leg-slip வைத்துவிட்டு பவுலர்களை bouncer போடச் சொல்கிறார்கள். தோனியே இப்படி எத்தனை முறை செய்திருக்கிறார்? நியாயப்படி, பிராட்மேன் காலத்திலேயே பவுன்ஸர் போடுவதைத் தடை செய்திருக்கலாமே? ஏன் தடை செய்யவில்லை?
மைக் காட்டிங் தொடங்கி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வரை எத்தனை பேட்ஸ்மென்கள் எலும்பு முறிந்து, ரத்தம் சொட்டச் சொட்ட வெளியேறினார்கள்? இந்திய வீரர் ராமன் லம்பா இறந்தது எப்படி? அவருக்கு பிரெயின் ஹெமரேஜ் ஏற்பட காரணமாக இருந்தது எது? ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் மைதானத்தில் அடிபட்டு ஒருவர் இறந்தே போய்விட்டாரே? இந்த அளவுக்கு உயிருக்கே ஆபத்தானது என்று தெரிந்தும் பவுன்ஸர் போடுவதை யாராவது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டைக் கெடுக்கிற சமாச்சாரம் என்று பேசுகிறார்களா?
பவுன்ஸர் போடுகிற பவுலர்களை ’அடேய் இது அடுக்குமா? கிரிக்கெட்டின் புனிதத்தை அழிக்க வந்த புல்லுருவியே! மாற்றான் உயிரை மாய்க்க வந்த மதக்களிறே! கண்ணியவான்களின் விளையாட்டைக் கற்பழிக்க வந்த காமுகனே!’ என்றெல்லாம் மு.க. ஸ்டைலில் டயலாக் பேசியிருக்கிறீர்களா?
ஒரு பவுலர் தனது பவுலிங் க்ரீஸில் ஒரு அரை அங்குலம் காலை தவறாக வைத்தாலும், அதை நோ-பால் என்று சொல்லி ஒரு ஃப்ரீ-ஹிட் கொடுத்து விடுகிறீர்கள். அந்த ஃப்ரீ-ஹிட்டில் சிக்ஸர் கூட அடிக்கலாம்; ஆனால், அவுட் ஆக முடியாது. என்ன எழவு நியாம்டா இது?
ஒரு பேட்ஸ்மேன் தனது பேட்டிங் க்ரீஸிருந்து இரண்டு மூன்று அடி முன்னாலே குதித்து வந்து சிக்ஸர் அடிக்கலாம் அல்லது சுரேஷ் ரெய்னா மாதிரி கேட்ச் கொடுத்து அவுட்டும் ஆகலாம். அது பரவாயில்லை. ஆனால், ஒரு பவுலர் ஒரு கால் அங்குலம் கோட்டைத் தாண்டி காலை வைத்தால் அது குத்தமா? நோ பால் கொடுப்பீங்களோ? ஃப்ரீ-ஹிட் கொடுப்பீங்களோ?
ஒவ்வொரு பவுலரும் பந்து வீசும்போது, ‘இவன் வலதுகை ஆட்டக்காரன். இவனுக்கு இப்படி பவுலிங் பண்ண வேண்டும்,’ என்று திட்டமிட்டு வருவான். ஆனால், பேட்ஸ்மென் ரிவர்ஸ்-ஸ்வீப் பண்ணலாம்; தப்பேயில்லை. ஸ்விட்ச்-ஹிட் பண்ணலாம். அதுவும் தப்பில்லை. ஆனால், பந்து வீசுவதற்கு முன்பே இரண்டு மூன்று அடிகள் முன்னே ஓடிவிட்ட ஒரு பேட்ஸ்மேனை ரன் – அவுட் பண்ணினால், ‘ஐயகோ, கிரிக்கெட்டின் புனிதம் போச்சே. இது அடுக்குமா?’ என்று கூச்சல் போடுவீங்களோ?
எத்தனை மேட்சுகளில் ஒரு கால் அங்குல இடைவெளியில் ரன் அவுட் உண்டு அல்லது இல்லை என்று முடிவாகியிருக்கிறது. அதுபோன்ற தருணங்களில், benefit of doubt என்ற ஒரு வெளக்கெண்ணை வியாக்கியானத்தைப் பிடித்துக்கொண்டு, பேட்ஸ்மேனுக்கு சாதமாகத் தீர்ப்பு வழங்கியிருப்பார்கள்? அப்படிப்பட்ட சிக்கலான சங்கதிகளால் வெற்றி தோல்வி இடம் மாறிய மேட்சுகள் எத்தனை?
கிரிக்கெட்டின் சட்டப்படி அஷ்வின் செய்தது சரியா தவறா? தவறில்லை என்று சொல்லி விட்டார்கள். அத்தோடு பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு அடுத்த வேலைக்குப் புறப்படுங்கள். சட்டவிரோதமான சங்கதிகளையே முழுசாகத் தடுக்க முடியாமல் முழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம். இதிலே சட்டத்துக்கு உட்பட்டு அஸ்வின் செய்ததைக் குறைசொல்ல வந்திட்டீங்களாக்கும்?
கண்ணியவான் விளையாட்டு என்பதெல்லாம் கழுவேறி சில தசாப்தங்கள் ஆகிவிட்டன. தின்ற மாமிசம் செரிப்பதற்காக பிரபுக்கள் ஆடிய கிரிக்கெட் அல்ல இன்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது. இது வீரர்களின் எதிர்காலம் தொடர்புடையது. கடைசியில் முக்கியமானது வெற்றியா தோல்வியா என்பதுமட்டும்தான்.
Everything is fair in war and cricket. Just shut up
– ஆர்.வேணுகோபாலன்