கும்பகோணத்திலிருந்து வந்திறங்கிய தெய்வீக பொம்மைகள், சிங்கப்பூர் மண்ணில் சிருங்காரத் தாண்டவம் ஆடின! -தேன் தமிழில் கொஞ்சின. தேவாரம் பாடின. கை கால் தூக்கி பரத ஜதி போட்டன.
திருநரையூரில் அவதரித்த சைவைத் திருமுறைகள் கற்ற நம்பி ஆண்டார் நம்பி கலை சொட்டும் சிலையாக வந்தார்-கரையானால் அரிக்கப் பட்ட திருமுறைகளை மீட்க மன்னன் இராஜராஜன் சர்வலங்காரனாகக் காட்சி தந்தான்.. தில்லைப் பதி சென்ற அவர்களிடம் . தமிழ் மூவர் வந்தால் மட்டுமே பூட்டிக் கிடக்கும் அறை திறக்கப்படும் என்ற நிபந்தனை தெரிவிக்கப் படுகிறது., மதிநுட்ப மன்னன் அதைத் தீர்த்து வைக்க, திறக்காத கதவு திறக்கப்படுகிறது. அங்கே திருமுறை மற்ற ஓலைகள்…அத்தனையும் நம்பியிடம் ஒப்படைக்க சைவப் பயணம் தொடர்கிறது.
குடந்தை ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்டக் குழுவினரின் திறன் சொட்ட உருவான ‘திருமுறை கண்ட சோழன்’ பொம்மலாட்ட நாடகம், உள்ளூர் தமிழ் மக்களுக்கு உரமான பொழுதுபோக்காக அமைந்தது. தமிழ் மொழி மாதத்தை ஒட்டி, வளர் தமிழ் இயக்கமும், சியாமா இசை அமைப்பும் இணைந்து படைத்த நிகழ்ச்சி இது.\
’வர வேண்டும் வர வேண்டும் கணபதியே’என்ற நாடக ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் ஒரு துதிப் பாடலுடன் தொடங்கும் இந்த ஒன்றரை மணி நேர பாவைக் கூத்தில் , உயிர்த் துடிப்போடு பாத்திரங்கள் தத்ரூபம் குறையாமல் நெளிந்து, வளைந்து ஆடிப் பாடிப் பேசி அமர்க்களம் செய்தன. 7 பேர் கொண்ட கலைஞர்கள் பின்னணியில் அதனை ஆட்டி வைத்த அழகு பாராட்டுக் குரியது. இவர்களன்னியில் உள்ளூர் பாடர்களும், மற்ற பல உத்தியாளர்களும் தங்கள் பங்கை செய்தனர்.
நான் (ஏ.பி.ராமன்) நிகழ்ச்சிக்கு முன்னிலை! அனைவருக்கும் மரியாதை செய்யச் சொன்னார்கள். அத்தோடு விட்டார்களா? கும்பகோணத்துக்காரர்கள் தன் அழகுப் பதுமையின் கையில் மாலை ஒன்றைத் தந்து என் கழுத்தில் போடச் செய்தனர். அதற்கு ‘மாலை போடவா-மாலை போடவா’ பாட்டும் உண்டு. எதிர்பாராத மரியாதை தான். . பெண் பாவை ஒன்று என்னைக் கட்டி அணைத்து, கொஞ்சி விளயாடி மாலை இட்டு மகிழ்ந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னையும் மேலிருந்து கயிற்றால் ஆட்டி வைக்கிறார்களா என்ற சந்தேகத்துடன் மேல் நோக்கிக் கண்ணோட்டமிட்டேன். கை-கால்-கழுத்து-தலை என முறுக்கேறிய கயிறுகளால் தங்களைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு, அக் கலைஞர்கள் துல்லியமாகப் பொம்மைகளை ஆட்டி வைத்த அழகே அழகு!
சில திரைக் காட்சிகள் அருமை. சோழ மன்னனின் அரண்மனை, தஞ்சை பெரிய கோயில், தில்லை நடராஜன்…அவர்களின் சிறிய திரையரங்கில் பிரம்மாண்டம் காட்டும் முயற்சி! முதல் நாள் என்பதாலோ என்னவோ, இசைப் பகுதி இணைந்து வரவில்லை. தேவாரத் திருவிசை இன்னும் மெருகேற்றப்படலாம். –
– ஏ.பி.ஆர்.