சஷ்டி அப்த பூர்த்தி, பிமரத சாந்தி, சதாபிஷேகம், விஜயரத சாந்தி என்றெல்லாம் பல்வேறு கர்மாக்கள் மனித வாழ்வில் நம்மை கொண்டு செல்கிறது. இந்தக் கர்மாக்கள் நம்மை அடைந்தது ஏன்? நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம்?
ஜன்மாந்தர க்ருதம் பாபம் வ்யாதிரூபேண பாததே |
தத் சாந்தி: ஒளஷதை: தானை: ஜபஹோம ஸுரார்சனை: ||
முற்பிறவியில் ஒருவன் செய்த பாபம், இப்பிறவியில் நோய் வடிவில் துன்புறுத்துகிறது. இது மருந்து, தானம், ஜபம், ஹோமம், தேவதா ஆராதனம் ஆகியவற்றால் நீங்குகிறது.
சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட சாந்திகளையும், கர்மாக்களின் செய்முறைகளையும் ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், காத்யாயனர், விகனஸர் போன்ற பல மஹரிஷிகள் சூத்ரங்களாக அருளிச் செய்தனர். மஹான்களால் அருளப்பட்ட இந்த சாந்திகளால் துன்பங்களும், நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளும், உடல் நலமும், மனநிம்மதியும், அனைத்து வளங்களும் கிடைக்கும்.
ஒரு மனிதன் வாழ்வில் செய்து கொள்ள வேண்டிய சாந்தி கர்மங்கள் நிறைய உண்டு. அவற்றுள் முக்கியமானவை
* அப்தபூர்த்தி சாந்தி
* பீம சாந்தி
* உக்ரரத சாந்தி
* ஷஷ்டியப்தபூர்த்தி
* பீமரத சாந்தி
* விஜயரத சாந்தி
* சதாபிஷேகம்
* ப்ரபௌத்ர ஜனன சாந்தி
* ம்ருத்யுஞ்ஜய சாந்தி
* பூர்ணாபிஷேகம் போன்றவை ஆகும்.
இந்த சாந்திகள் அனைத்தும் நம் நன்மைக்காக மஹரிஷிகளால் கொடுக்கப்பட்டவை.
உதாரணமாக, ஒரு குழந்தைக்கு, முதல் ஆண்டு நிறைவடையும் போது துஷ்ட க்ரஹங்களால் பெரும் ச்ரமம் ஏற்படும் . எனவே தோஷம் விலகவேண்டி முறைப்படி சாந்தி செய்யவேண்டும். ஆயுஷ்ய ஹோமத்துடன் கூடிய இந்த சாந்திக்குப் பெயர் அப்த பூர்த்திசாந்தி.
இதே போல ஒவ்வொரு வார்ஷீக ஜன்ம நக்ஷத்ரம் (பிறந்த நாள்) தோறும் ஆயுஷ்ய ஹோமம், நக்ஷத்ர ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஆகிய ஏதாவதொன்று செய்வது நம் மூதாதையரின் வழக்கமாக இருக்கிறது. ஆக, குழந்தையின் முதல் பிறந்தநாளில் செய்வதே அப்தபூர்த்தி சாந்தி.
இதே போல,
* பீம சாந்தி 55ஆவது வயது ஆரம்பத்திலும்,
* உக்ரரத சாந்தி 60ஆவது வயது ஆரம்பத்திலும்
* ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி 61ஆவது வயது ஆரம்பத்திலும்
* பீமரத சாந்தி 70ஆவது வயது ஆரம்பத்திலும்
* விஜய ரத சாந்தி 78ஆவது வயது ஆரம்பத்திலும்
* சதாபிஷேகம் 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளிலும்
* ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்த பிறகு ஒரு சுபதினத்திலும்
* ம்ருத்யுஞ்ஜய சாந்தி 85ஆவது முதல் 90க்குள்ளும்
* பூர்ணாபிஷேகம் 100ஆவது வயதில் சுபதினத்திலும் செய்யப்பட வேண்டும்.
– Aravind Subramanyam அரவிந்த் சுப்ரமணியன் எழுதிய ஷஷ்டி யப்தபூர்த்தி நூலிலிருந்து..
- புகைப்படங்கள்: தமிழச்சி தங்கபாண்டியன் தம்பதியின் சஷ்டி அப்த பூர்த்தி நிகழ்வில் இருந்து…