கமல்ஹாசனுக்கு பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்று இப்போது பலரும் கமலின் அந்தரங்க வாழ்க்கையைத்தான் முச்சந்திக்கு இழுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நின்று கொண்டு ஞாயிற்றுக்கிழமை பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று பேசினார்.
இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல், அதிமுக அமைச்சர்கள் சிலரும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சும் ஊடக பேட்டியும் தற்போது பரவலாக ஆதரவைப் பெற்று வருகிறது. வழக்கம்போல் திராவிட இயக்கங்கள், கிறிஸ்துவ அமைப்புகளால் வளர்க்கப்பட்டு வரும் தமிழர் அமைப்புகள் உள்ளிட்டவை கமலுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரியும் வகையில் அதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான “நமது அம்மா” கமல் தன் மகளுக்கு முத்தம் கொடுக்கும் படத்தை வெளியிட்டு எழுதியுள்ள கட்டுரை, மலின ரசனைக்கு உரியது என்றும், தரம் தாழ்ந்தது என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப் பட்டு வருகின்றனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் கமலை விமர்சனம் செய்வது என்பது, அவரது தற்போதைய ஹிந்து தீவிர வாதி எனும் கருத்துக்காக என்று எடுத்துக் கொள்வதை விட, கடந்த காலங்களில் கமல்ஹாசன் அதிமுக.,வை செய்து வரும் விமர்சனங்களுக்கான பதிலடி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜெயலலிதா என்ற ஆளுமை மரித்த பின்னர் அரசியலில் உயிர்த்தெழுந்த கமல்ஹாசன், ஆளும் தரப்பை சீண்டுவதையும் விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட வகையில் விமர்சனம் செய்வதையுமே பழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் அதிமுக., அமைச்சர்களுக்கும் கமல் தரப்புக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் மூண்டது.
இந்நிலையில், நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த கமல் எதிர்ப்பு என்பது, தற்போது அடித்துள்ள இந்து தீவிரவாதம் என்ற காற்றால் மேலும் கிளறப்பட்டு, இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே பழைய முட்டல் மோதல் ஒட்டல் உரசலில் ராஜேந்திர பாலாஜி வாய் திறந்ததும்!
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு அதிமுகவின் நாளிதழ் கமலைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இன்று வெளியாகியுள்ள நாளிதழில் கமலை இழிவுபடுத்தி, மகளின் முத்தப் புகைப்படத்துடன், பொலிகாளை என்று குறிப்பிட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அப்பா கமல் முத்தம் கொடுப்பதைப் போட்டு கேவலப்படுத்தி இருப்பது மிகவும் கண்டத்துக்குரியது என்று பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்த @AIADMKOfficial
இடத்தில் எப்படி இப்படி ஒரு தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறது!
அதிமுக., நாளிதழில் மகளுக்கு தந்தை முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை போட்டு பொலிகாளை என தலைப்பு வேறு! அடச்சீ எத்தனை அருவருப்பான புத்தி! ????????????
தனது மகளுக்கு கமல் முத்தமிடும் படத்தை போட்டு அதற்கு கேவலமான ஒரு தலைப்பையும் இட்டிருக்கிறது அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா!
அதிமுகவின் கண்ணியமும் கட்டுப்பாடுமா அடகு வைக்கப்பட்டுவிட்டது ?
அரசியல்ல கமலை விமர்சிக்க காரணங்கள் எத்தனையோ இருக்க.. தனிப்பட்ட வாழ்க்கையை, அவர் திருமண பந்தங்களை இழுக்கறதே அநாகரீகம். இதுல அப்பா பொண்ணு போட்டோ போட்டு கட்டுரைல்லாம் கீழ்த்தரம். நாக்கை வெட்டுவேன்னு சொல்றதை விட இது வன்முறை. உணர்வுபூர்வமா பலவீனப்படுத்தற மட்டமான யுக்தி.
ஆனாலும் “நமது அம்மா”னு ஜெயலலிதா பெயர்ல பத்திரிக்கை நடத்திட்டு இதெல்லாம் பண்ணும்போது கொஞ்சங்கூட உறுத்தாது இவனுகளுக்கு?!
இப்படி பல்வேறு விமர்சனங்களை இன்றைய நமது அம்மா செய்தி எதிர்கொண்டிருக்கிறது.