எத்தனை விக்கெட் போச்சு என்று பீகார் மாநில அமைச்சர் கவலையாகக் கேட்டாராம்… குழந்தைகள் இறப்பு குறித்து கவலையுடன் விவாதித்து வந்த கூட்டத்தில்!
பீகாரில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பாண்டே. குழந்தைகள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் இருந்தது. இந்தியா பேட்டிங்கை பார்த்து விட்டு கூட்டத்துக்கு வந்த அமைச்சருக்கு இருப்பு கொள்ளவில்லை!
பாகிஸ்தான் பேட்டிங் குறித்து அறிய அவருக்கு அவ்வளவு ஆவல். நிலை கொள்ளாமல் தவித்தார். குழந்தைகள் இறப்பு குறித்து அனைவரும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்த போது , திடீரென அமைச்சர் மங்கள் பாண்டே அங்கிருந்தவர்களிடம் “எத்தனை விக்கெட் விழுந்துச்சாம்??” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருவர் நான்கு என பதிலும் அளித்துள்ளார்.
பீகாரில் 104 குழந்தைகள் இறந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து முறையான நடவடிக்கை இல்லை எனவும், போதுமான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஒருவர் இவ்வாறு அலட்சியமாக கிரிக்கெட் ஸ்கோர் கேட்டது, ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.