பாட்டி பாட்டி! ஒரு கதை சொல்லேன்… – இப்படி, குழந்தைகள் பாட்டிகளிடம் கதை சொல்லக்கேட்டு கெஞ்சும் காலம் இனி வருமா? தெரியாது. ஆனால், முதுநிலைப் பட்டப் படிப்பாகவும், எக்கச்சக்க டிப்ளமா படிப்புகளாகவும் கதைகள் கார்ப்பொரேட் சாயம் பூசப்பட்டு மேனேஜ்மென்ட் படிப்புகளாக பரவலாக வந்தேவிட்டது. அவற்றுக்கு இன்று மாணவர்கள் மத்தியில் ஏக கிராக்கிதான்!
பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் டி.வி.பெட்டியின் சீரியல்களிலும் முடங்கிவிட்ட நிலையில், காசு கொடுத்து கிளாசுக்குப் போய் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது இன்றைய இளைய தலைமுறை!
மேனேஜ்மென்ட் என்று பரவலாக தற்போது பேசப்படும் படிப்பு, நமக்கு ஒன்றும் அன்னியமானது இல்லை. பண்புக் கதைகள் வழியே, சிச்சுவேஷன் எல்லாம் சொல்லி, அதற்கான தீர்வுகளை எட்டிய விந்தை வித்தையை நம் நாட்டில் கற்றுத் தந்திருக் கிறார்கள். நம் இதிகாசங்களும், காவியங்களும் கதாபாத்திரங்களின் வழியே பல ‘டெக்னிக்கல்’ விஷயங்களையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று போகிற போக்கில் எடுத்துச் சொல்கின்றன.
படிக்க போரடிக்காத சுவாரஸ்யமான கதைகள், எப்படி நம் நாட்டின் இயல்புக்கேற்ற மேலாண்மை நுட்பங்களை நமக்கு அள்ளித் தருகின்றன..?
மேலாண்மைப் பண்பு என்றவுடன், அது ஏதோ புதிதானதென்று ரொம்பவும் பயப்பட வேண்டாம். ‘மேனேஜ்மென்ட் க்வாலிட்டீஸை வளர்த்துக் கொள்ளுங்கள்; இந்த விளம்பர, வர்த்தக உலகில் அது நிச்சயம் தேவை’ என்று யாரேனும் நம்மைப் பார்த்துச் சொல்லும்போது, ஏதோ புரிந்ததுபோல் தலையாட்டுவோமே! இப்படிப்பட்ட அட்வைஸ்களை காலேஜ் பருவத்தில் மட்டுமா கேட்கிறோம். பள்ளியில் படிக்கிற நாள் முதலே பலருக்கும் இத்தகைய புத்திமதிகள்தான் மூளையைத் தாக்கியிருக்குமே. புரிந்தும் புரியாததுபோல், அது என்ன தனிப் படிப்பு என்று அப்போதே யோசிக்கத் தொடங்கியிருப்போம். இப்போது அந்த அளவுக்கு மெனக்கெட வேண்டாம்.
நம் நாட்டில் பழங்காலம் முதலே இதுதான் மேனேஜ்மென்ட் படிப்பு என்று சொல்லாமல், மேலாண்மைப் பண்புகளை சிறுவயது முதலே கற்றுக் கொடுத்தார்கள். அதற்கு அவர்கள் கையாண்ட வழி, சிறுவர் உள்ளங்களில் உடனடியாகப் பதிந்துகொள்ளும் ‘உருவகக் கதைகள்’ உத்திதான்! பஞ்ச தந்திரக் கதைகள் உருவானதும் இதனால்தான். காக்கைகளும், புலி, சிங்கங்களும் நரிகளும் எத்தனை கதைகளில் மனிதர்களுடன் மனம் விட்டுப் பேசியிருக்கின்றன. ஒவ்வொன்றும் சில சுவாரசியமான பண்புகளைப் பதிய வைக்கின்றன இல்லையா!
மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. உலகம் வேகமாகச் சுழல்வது போல் தோன்றுகிறது. வாழ்க்கை வேகமாகிவிட்டது. கிடைத்த இந்தப் பிறவியில், இயன்ற அளவு மற்றவருக்கும் பயன்தரும்படி வாழ வேண்டும்.
இதுவே லட்சிய புருஷர்களின் வாழ்க்கையில் உள்ளூர வேரோடியிருக்கும். அவர்களின் வாழ்க்கையைப் படிப்பவர்களுக்கு தாமும் அதுபோல் லட்சிய வாழ்க்கை வாழ ஒரு கனவாவது இருக்குமில்லையா? அந்தக் கனவினை நனவாக்க, உங்களின் மேலாண்மைப் பண்பினை மேம்படுத்திக் கொள்ள நம் பாரம்பரியப் பொக்கிஷங்கள் வழிகாட்டுகின்றன.