திருப்பூரில் நடந்த இயற்கை உணவுத் திருமணம் ஒரு அதிசயமாகப் பேசப் படுகிறது. இப்படி ஒரு நிகழ்வை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள் என்கிறார்கள் திருப்பூர்வாசிகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை … ஆடம்பரமாக, ஊரில் உள்ள பெரும் செல்வந்தர்கள் வீட்டில் நடக்கும் திருமணம் என்றால் நாம் ஆச்சரியமாக பார்ப்போம். அதுவும் சொகுசு காரில் வந்து இறங்குவது, வெளியூர் அல்லது பிரபலமான குழுவின் பாட்டுக் கச்சேரி என தூள் பறக்கும் திருமணத்தைப் பார்க்கும் போது.. அது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
ஆனால் திருப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் இதையெல்லாம் செய்யாமல் முற்றிலும் இயற்கையான முறையில் உணவு கொடுத்து, இயற்கை உணவுத் திருமணம் என நம்மை ஆச்சரியப்பட வைத்துவிட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இயற்கையாக விவசாயம் செய்யும் இவர் சாயப் பட்டறை கழிவுகளுக்கு எதிராக போராடியும் வருகிறார். மேலும் பிளாஸ்டிக் பை, கேரிபேக், கப் என சூழலை கெடுப்பதற்கு எதிராகவும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
இவர் தன் மகள் கீதாஞ்சலியை திருப்பூரைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்கு அண்மையில் மணம் முடித்து வைத்தார். இந்தத் திருமணத்தை முற்றிலும் இயற்கையாக, செய்து அசத்தியுள்ளார்..
திருமணத்தில் உணவுக்காக வந்த காய்கறிகள் அனைத்தும் தன் தோட்டத்தில் இயற்கை விவசாயம் மூலம் விளைவித்தது தான். மேலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்துவதால் அதன் சத்துக்கள் எல்லாம் போய்விடும் என்பதால் நேரடியாக மழை நீரை சேமித்து வைத்து அதைத் தான் உணவு தயாரிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் திருமண விருந்தின் போது தண்ணீர் கொடுக்க பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக செம்பு டம்ப்ளரை பயன்படுத்தியுள்ளார். இவர் வீட்டில் மட்டுமல்ல இவருக்கு தெரிந்தவர்கள் வீட்டிலும் மழை நீரை சேமித்து வைக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார். மழை நீர் சேமிப்பு கலன்களை மட்டும் சுமார் ரூ1.5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
மேலும் இந்தத் திருமணத்திற்கு வரும் குழந்தைகள் விளையாட பனை நுங்கு வண்டியை தயார் செய்து வைத்திருந்தார். இவரது திருமணத்திற்கு சென்றவர்கள் எல்லாம் இதைக் கண்டு பெரும் வியப்பிற்கு உள்ளாகி விட்டனர்.
இவ்வாறு ஆரோக்கியத்தையும், உடல்நலனையும் மையமாகக் கொண்டு விழிப்பு உணர்வுடன் நடந்த இந்தத் திருமணம் பலரை கவர்ந்து விட்டது.
- கே.சி.கந்தசாமி