தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் விருது, நடப்பு ஆண்டு எழுத்தாளரும், காவிரி குழுமத் தலைவருமான கோமல் அன்பரசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அறிவித்தார். வரும் மே 7ஆம் தேதி தருமபுரத்தில் பிரமாண்டமாக நடைபெறும் குடமுழுக்கு உத்ஸவத்தின்போது ‘அறிஞர் விருது’ கோமல் அன்பரசனுக்கு வழங்கப்படும்.
தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் பெயர் பெற்ற ரா.பி.சேதுப்பிள்ளைக்கு தருமபுரம் ஆதீனம் ‘சொல்லின் செல்வர்’ விருது வழங்கியது. அவரில் தொடங்கி முக்கால் நூற்றாண்டாக அறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரம் ஆதீனத்தின் ‘தமிழ் அறிஞர்’ விருது மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையின் சார்பில், கோமல் அன்பரசன் எழுதிய நூல்களின் ஆய்வரங்கம் ‘அன்பெழுத்து’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அருளாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை தனி மாவட்ட போராட்டத்துக்கு வித்திட்டவர் கோமல் அன்பரசன் என்று பாராட்டினார். மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமைந்தால் அப்பெருமை அன்பரசனையே சாரும் என்றார் ஆதீனம்.