இன்று எங்களது கலைமகளின் தலைமகனாம் கி வா ஜ அவர்களின் பிறந்த தினம்.
ஒரு மொழியின் வளமை அதன் இலக்கியத்தில் மட்டுமல்ல அம்மொழியின் பழமொழிகளிலும் நாடோடி பாடல்களிலும் புதைந்து கிடக்கின்றன. இந்த புதையல்களை தோண்டி எடுத்தவர் கலைமகளின் ஆசிரியர் ஸ்ரீமான் கி வா ஜெகநாதன் ஆவார் என்று ஒருமுறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சொற்பொழிவாற்றும் போது குறிப்பிட்டார். தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெருந்தகை என்றால் அது மிகையல்ல!
சிலேடை பேசுவதில் கெட்டிக்காரர். ஒரு காங்கிரஸ்காரர் கலைமகள் அலுவலகத்திற்கு வந்து இவருடன் பேசிக்கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் நான் கதர் கோஷ்டி என்றார் அவர். கதர் கோஷ்டி சரி கதறடிக்கும் கோஷ்டி இல்லையே?_ என்று தமாஷாக் கேட்டாராம் கி வா ஜ .
இன்னொரு முறை ஒருவர் பலசரக்கு கடை வைக்க வேண்டும். என் கடையில் எந்த சாமியின் படத்தை மாட்டலாம்? என்று ஆலோசனை கேட்டார்.
கி வா ஜ உடனே பதில் சொன்னார் நீங்கள் எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டலாம். கலப்படம் மட்டும் பண்ணாதீர்கள் என்று சொன்னபோது அந்த வியாபாரிகள் உள்பட அலுவலகத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்து மகிழ்ந்தார்களாம்.
ஸ்ரீமான் ஆதி லக்ஷ்மணன் காட்பரீஸ் நிறுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர். கி வா ஜ மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர். சென்னையில் இவர்தான் ஸ்ரீமான் வைத்தி சுப்ரமணியர் வீட்டில் சிருங்கேரி மகா சன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளிடம் அறிமுகப்படுத்தினார்.
இவர் இலக்கணம் தப்பாமல் கவிதைகள் எழுதக்கூடிய ஆசுகவி என்று சுவாமிகளிடம் தெரிவித்தார் ஆதிலட்சுமனன். அவருடைய பெயரை அறிந்திருந்த சுவாமிகள் உடனே சொன்னார் இவர் ஆசுகவி மட்டுமல்ல உலக மகாகவி இவர் பெயர் தான் ஜெகநாதன் ஆயிற்றே!
சுவாமிகளின் சிலேடைப் பேச்சில் தன்னை மறந்து போனார் கி வா ஜ. அபி நவ வித்தியா தீர்த்த மகா சுவாமிகளின் உபன்யாசங்களைஸ மனதில் உள்வாங்கிக் கொண்டு அவைகளை பின்னர் கலைமகளில் தொடராக வெளியிட்டார்.
கி வா ஜ புகழ் வாழ்க
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
(ஆசிரியர், கலைமகள் / மஞ்சரி)