எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு – கொண்டாட வாங்களேன் என்று அழைக்கும் வகையில் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் நினைவலைகளைத் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இலக்கிய உலகுக்கு நினைவூட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஆர். இந்துமதி. அவரது பதிவில் இருந்து…
இந்த 2020ல் எத்தனையோ பாதிப்புகளும், மன சங்கடங்களும், பொருளாதார நெருக்கடிகளும், இழப்புகளும், உயிர் சேதாரங்களும், உயிர் பலிகளும் ஏற்பட்டிருந்தாலும், ஆழமான காயங்களை ஏற்படுத்திய ஆண்டு என்றாலும், எப்போதுமே மாறாத வடுவாகத் தங்கிப் போகக் கூடயதாக இருந்தாலும், இது தி.ஜானகிராமனின் நூற்றாண்டு என்கிற போது புத்துணர்ச்சி பாய்கிறது.நம்மையும் மீறி மனம் சந்தோஷப் படுகிறது. கூடவே சொல்ல முடியாத ஆற்றாமையும் வருகிறது.
ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி மா மனிதராகவும் கொண்டாடப் பட வேண்டியவர். அவரது நூற்றாண்டை எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கலாம்.பட்டி மன்றங்கள், கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், விவாதமேடைகள் என விழாக்களாகக் கொண்டாடி இருக்கலாம். குறைந்த பட்சம் குமுதம், விகடன்,கல்கி, குங்குமம், தினமணி கதிர் என எல்லாப் பத்திரிகைகளும் அவரது சிறுகதைகளையாவது வெளியிட்டு தாங்களும் பெருமை பட்டிருக்கலாம்.
பத்திரிகைகள் செய்ய மறந்ததை முகநூல் செய்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி.எல்லையற்ற சந்தோஷம். கனலியில் சுகுமாரன் உயிர்த்தேன் பற்றிய மிக விரிவான கட்டுரைஎழுதியிருந்தார். குறுநாவல்களை மாலன் அற்புதமாக ஆராய்ந்திருந்தான். குப்புசாமி சிறுகதைகள் பற்றி சரித்திரம் படைத்திருந்தான்.
மாலனின் கட்டுரைக்கு நான் என் ஈமெயிலில் இவ்வாறு பதிலளித்திருந்தேன்:-
” அடேயப்பா! அசர அடித்து விட்டாய். தி.ஜாவைப் பற்றி தி.ஜாவே எழுதின மாதிரி இருந்தது. கூடவே தி.ஜாவை மீறின சாமர்த்தியம் தெரிந்தது. உன் புத்திசாலித்தனம் தெரிந்தது.சுஜாதா ஜானகிராமன் கலந்த கலவை எனப் பட்டது.
வாமனனும் இல்லாத திருவிக்ரமனும் இல்லாத ஒரு பிரகிருதி என்பது நல்ல ஒப்பீடு. எட்டு ரூபாய்க்குப் பதினாறு முழம் புடவை-இதிலிருந்து இடம், காலம் மனிதர்கள், அவர்கள் மொழிகள், முக்கியமாக மனோபாவங்கள் மாறி விட்டதைத் துல்லியமாக எழுதியிருக்கிறாய்.
குலாப் ஜாமூனின் கோளத்தை அழுத்தினால் கசிந்து கையில் ஒட்டிக் கொள்கிற ஜீராவைப் போல் மனிதர்கள் மீதான பேரன்பு என்று ஜானகிராமனை நீ குறிப்பிட்டிருப்பது மிக அழகு.
திருமணத்திற்கு வெளியில் உள்ள ஆண்களிடம் மனதையும் உடலையும் கொடுத்து விடுகிற கதாபாத்திரங்கள், அவர்களது உறவு உணர்வுகளைத் தி.ஜா வெளிப்படுத்திய நாசூக்கையும், மென்மையையும், லயத்தையும் வேறு யாரும் கையாளவில்லை. கார்த்திகை விளக்கு வேப்பம்பழம் போல் ஊர்த்திண்ணையெல்லாம் பின்னணிக் கொண்டிருந்தது- இப்படி யார் எழுதியிருக்கிறார்கள் சொல்லு பார்க்கலாம்..
மாப்பிள்ளைத் தோழனில் வெளிப்பட்டதை அறச்சீற்றம் என்றா சொல்கிறாய்..? எனக்கென்னவோ அது அனுசரித்தல் என்றுதான் பட்டது. வாழ்க்கையை சிரிப்போடு ஏற்றுக் கொள்ளச் சொல்லித்தந்த பாடம் என்பதே என் புரிதல்.
திரைப்பட படப்பிடிப்பில் வெட்டி வைக்கப் பட்ட தென்னைமரம்– அறச்சீற்றம்.
ஒப்பற்ற ரசனையும் எதார்த்தமும் பேரன்பும் அழகிய நகாசு வேலைகளுமே தி.ஜ.வின் எழுத்துக்கள் என்பதில் உன்னைப் போலவே எனக்கும் மாற்று கருத்து இல்லை.
மெருகு போட்டுக் கொண்டது தி.ஜாவின் நடை மட்டுமல்ல. உன் இந்த எழுத்தும்தான்.மிக நல்ல ஆய்வு. தி.ஜாவைப் உணர்ந்து அனுபவித்த எழுத்து-மாலியின் புல்லாங்குழல் இசை மாதிரி…
இது மாலனது கட்டுரைக்கு என் பதில்
அடுத்து குப்புசாமி கணேசனின் ஜானகிராமனின் சிறுகதைகள் பற்றிய கட்டுரை.
குப்புசாமி மீன் குஞ்சு. அதற்கு நீந்தக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? ஜானகிராமன் என்ற நதியில் நீந்தி நீந்தி விளையாடுகிற மீன். எழுத்துத் திமிங்கிலம்.அந்ததத் திமிங்கிலம் ஜானகிராமனின் ஒவ்வொரு கதையாக லாவகமாகக் கையாளுகிறது. அதன் ஒவ்வொரு கையாடலையும் வரிசையாகக் குறிப்பிடுகிறேன்.
1) பனித்துளியில் காணக் கிடைக்கும் பேரண்டம் என்கிறது.
2) கடைசி வரிகளுக்குப் பிறகு எழுதப்படாமலிருக்கும் வாழ்க்கை வாசகனின் மனவெளிக்குள் நிரம்பி விடுகின்றன.
3)ஒரு பெரும் வாழ்வை சிறிய சாளரத்தின் வழியே ஜானகிராமன் காட்டுவதைச் சிலாகிக்கிறது.
4) சில கதைகளில் அரண்மனை வாசலைப் போல கதையின் முடிவைத் திறந்து விட்டு பிரம்மாண்டத்திற்குள் பிரவேசிக்க வைக்கிறார்.
5) ஜானகிராமனின் காட்டுகின்ற சித்திரம் அலாதியானது. சொல்லாமல் பூடகமாகப் பொதித்து வைத்திருப்பவையே அவரது கதைகள்
6) எதையும் உரத்த குரலில் அவர் விளக்குவதில்லை.
7) அவரது கதைகளில் பெரும்பாலும் மரணங்கள் நிகழுவதில்லை.அப்படியே நிகழ்ந்தாலும் கூட அவை புதிய கதவுகளைத் திறந்து வைப்பதாகவே அமைகின்றன.
8) அவரது கதைகளில் சித்தரிக்கப் படுகின்ற எல்லாமே அழகானவை. மட்டுமின்றி வெளிச்சம் நிரம்பியவை.
9) அவர் கதைகளிலும் மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள்.துரோகமிழைக்கிறார்கள். பலரிடமும் தந்திரம், வன்மம், மூடத்தனம் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அது போன்ற கீழ்மைக் குணங்கள் கொண்டவர்களாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களை நம்மால் வெறுக்க முடிவதில்லை.வெறுக்கக் கூடிய பாத்திரங்களாகப் படைப்பதில்லை.அவர்களிடமும் இருக்கின்ற வெளிச்ச மூலைகளை இடுக்கில் புகுந்து நமக்குக் காட்டி விடுகிறார்.
10) சில அற்புதக் கணங்களை சொற்களற்ற மாயத்தை வாசகர்களின் மனத்துள் புகுத்தி விடுகிறார்.
11) மனிதர்களின் தெய்வ குணங்களைக் கண்டெடுத்துச் சொல்வதே இவரது இயல்பு.
இதைவிட ஜானகிராமனை எப்படிச் சொல்ல முடியும்? வேறு எப்படி ஆராதிக்க முடியும்? மகுடம் சூட்ட முடியும்?
எழுத்துலகின் குறுநில மன்னர் அல்ல அவர். எழுத்துலக சக்ரவர்த்தி. நகாசு வேலை செய்யத் தெரிந்த பொற்கொல்லர்.இயற்கையை எழுத்தாகத் தீட்டத் தெரிந்த ஓவியர்.சங்கீத வித்தகர்.வாசகர்களை மகுடி ஊதி அடக்கத் தெரிந்தவர். அவரது எழுத்து மாலியின் புல்லாங்குழலுக்கு மேலே.. கிருஷ்ணனின் வேணுகானம்.
கேட்கத் தெரிய வேண்டும்.அந்த அருவியில் குளிக்கத் தெரிய வேண்டும். நதியில் லாவகமாக நீந்திப்பழக வேண்டும். தூரலில் துள்ளிக் குதிக்க வேண்டும்.மார்கழிப் பனியை ரசிக்காமல் முக்காடு போட்டுக் கொள்பவர் களுக்கானவர் அல்லர் அவர்.
ஜானகிராமனின் நூற்றாண்டை நாங்கள் மனசார கொண்டாடி விட்டோம். நீங்கள்…?