கட்டுரை – ஜெயஸ்ரீ எம். சாரி. நாக்பூர்.
நாங்கள் படிக்கும் காலத்தில் அதிகாலையில் எங்களுக்காக தனியாக அலாரம் வைக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. அக்கம்பக்கம் வீடுகளிலிருந்து வரும் ஆல் இண்டியோ ரேடியோ ஸ்டேஷன்களில் இருந்து வரும் Signature Tune தான் 5.45க்கு எங்களுக்கு அலாரம்.
அதைத் தொடர்ந்து பக்திப் பாடல்கள். வேங்கடேச சுப்ரபாதத்தில் இருந்து பல்சமயப் பாடல்கள் வரை அனைத்தும் கேட்போம்.
செய்திகள் வானொலியில் கேட்கும் போது கிடைக்கும் திருப்திக்கு ஈடே கிடையாது. மாநில செய்திகள் வாசிப்பதில் ஜெயா பாலாஜியும், புது தில்லியில் இருந்து வரும் செய்திகளை வாசிப்பதில் சரோஜ் நாராயணஸ்வாமியும் மிகவும் பிரபலமாய் இருந்தனர். செய்தி வாசிப்பவர்களின் மொழியாற்றல், வார்த்தைகளுக்கு நடுவில் அவர்கள் கொடுக்கும் ஏற்ற இறக்கம், தெளிவான, சரியான உச்சரிப்பு என பல விஷயங்களிலிருந்து நாங்கள் பாடம் கற்றோம்.
கிரிக்கெட் நேர்முக வர்ணனைககளும் விளையாட்டை ரசிப்போருக்கு விருப்பமாய் இருந்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் வர்ணனையை கேட்போருக்கு ‘திக் திக்’ கான தருணங்கள்.
பெரிய பதவிகளில் இருப்போர் வானொலியில் பேசினாலே ஏதோ முக்கியமான விஷயமானது நாட்டு மக்களுக்கெல்லாம் தெரியப்படித்தப் படுகிறது, நாட்டு மக்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றது, என்றே உணரப்பட்டது
இன்று “மன் கீ பாத்” நிகழ்ச்சியும் பட்டித் தொட்டிகளில் எல்லாம் பகழ்பெற்றுள்ளது என்பதே இதற்கு ஒர் சான்று.
இசை, நாடகம், கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மழலையர்களுக்கான நிகழ்ச்சிகள் என்று பச்சிளம் குழந்தைகள் முதல் பல்போன முதியவர்களையும் இணைக்கும் பாலமாய் இருந்தது.
பெரிய வடிவில் இருந்து பாக்கெட் சைஸ் ரேடியோ வரை பலதரப்பட்ட அளவுகளில் வானொலிப் பெட்டிகள் இருக்கும். புது மாப்பிள்ளைகளின் பந்தாவான விஷயங்களில் பாக்கெட் ரேடியோவும் அடக்கம்.
இன்று பெரும்பாலான இல்லங்களில் வானொலி இல்லையென்றாலும், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களில் உள்ளங்களில் வானொலியின் நினைவலைகள் அலைவரிசைகளாய் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது என்பதே உண்மை!!
இன்று வானொலி தினம்