Home கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு (6)

பாரதி-100: கண்ணன் பாட்டு (6)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 6, கண்ணன் – என் தாய்

   கண்ணன் பாட்டின் இரண்டாம் பாடலான கண்ணன் என் தாய் நொண்டிச் சிந்து வகையைச் சேர்நத்து. முதலில் பாடலைப் பார்க்கலாம்.

உண்ண உண்ணத் தெவிட்டாதே – அம்மை

உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;

வண்ணமுற வைத்தெனக் கே – என்றன்

வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,

கண்ணனெனும் பெயருடையாள், – என்னை

கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து

மண்ணெனுந்தன் மடியில்வைத்தே – பல

மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். … 1

இன்பமெனச் சிலகதைகள் – எனக்

கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்

துன்பமெனச் சில கதைகள் – கெட்ட

தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்

என்பருவம் என்றன் விருப்பம் – எனும்

இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே

அன்பொடவள் சொல்லிவரு வாள்; – அதில்

அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். … 2

விந்தைவிந்தை யாக எனக்கே – பல

விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;

சந்திரனென் றொரு பொம்மை – அதில்

தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;

மந்தை மந்தையா மேகம் – பல

வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;

முந்தஒரு சூரியனுண்டு – அதன்

முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. … 3

வானத்து மீன்க ளுண்டு – சிறு

மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;

நானத்தைக் கணக்கிடவே – மனம்

நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;

கானத்து மலைக ளுண்டு – எந்தக்

காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;

மோனத்தி லேயிருக்கும் – ஒரு

மொழியுலை யாதுவிளை யாடவருங் காண். … 4

நல்லநல்ல நதிகளுண்டு – அவை

நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;

மெல்ல மெல்லப் போயவை தாம் – விழும்

விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;

எல்லையதிற் காணுவ தில்லை; – அலை

எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;

ஒல்லெனுமப் பாட்டினிலே – அம்மை

ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். … 5

சோலைகள் காவினங் கள் – அங்கு

சூழ்தரும் பலநிற மணிமலர் கள்

சாலவும் இனியன வாய் – அங்கு

தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்

ஞாலமுற்றிலும் நிறைந் தே – மிக

நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;

கோலமுஞ் சுவையு முற – அவள்

கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். … 6

தின்றிடப் பண்டங்களும் – செவி

தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,

ஒன்றுறப் பழகுதற் கே – அறி

வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;

கொன்றிடு மெனஇனி தாய் – இன்பக்

கொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,

நன்றியல் காதலுக் கே – இந்த

நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். … 7

இறகுடைப் பறவைக ளும் – நிலந்

திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்

அறைகடல் நிறைந்திட வே – எண்ணில்

அமைத்திடற் கரியபல் வகைப்பட வே

சுறவுகள் மீன்வகை கள் – எனத்

தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;

நிறைவுற இன்பம்வைத் தாள்; – அதை

நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. … 8

சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை

தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;

மீத்திடும் பொழுதினி லே – நான்

வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே

கோத்தபொய் வேதங்களும் – மதக்

கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்

மூத்தவர் பொய்ந்நடை யும் – இள

மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; … 9

வேண்டிய கொடுத்திடு வாள்; – அவை

விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;

ஆண்டருள் புரிந்திடு வாள்; – அண்ணன்

அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;

யாண்டுமெக் காலத்தி னும் – அவள்

இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;

நீண்டதொர் புகழ்வாழ் வும் – பிற

நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். … 10

இப்பாடலின் பொருளினை அடுத்த பதிவில் காணலாம். எளிய தமிழ், எளிய நடை கொண்ட இப்பாடலுக்கு பொருள் தேவையில்லை. தங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால் இப்பாடலைப் படித்துக்காண்பியுங்கள். அவர்களுக்கு தம் அன்னையின் நினைவு வரும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version