குறிஞ்சிப் பாணனின் பாடலில் சொக்கி
தாமரை மலர்களையும்
கெண்டைமீன் சாறையும் கொண்டுவந்த
மருத நிலத்து விறலி
ஏறிவந்த புரவியின் உரசலில் கிளர்ச்சியுற்று
கீழுதட்டைக் கடித்தபடி நிற்கிறாள்
ஆழ்விழிகளில் ஏக்கம் ததும்ப
நீள்சுவர் மண்டபத்துக் கல்லிருக்கையில் அமர்ந்தபடி
தனிமையின் இரைச்சலைப் படையலிடுகிறாள்
புதிர்த்திசையின் பாரம்தாளாமல் தடுமாறும் பதின்மன்
குத்திட்ட நெடுமலையின் தேனைப் பகிர்கிறான்
தேனின்ருசியிலும் பேச்சிலும்
மேலும் கிறங்கி நழுவுகின்றன பொழுதுகள்
இரவுக்கான பூச்சிகளும் வவ்வால்களும் ஓசையிட
நட்சத்திரங்களும் ஒளிரத்தொடங்கிவிட்டன
பரபரப்பாய்க் கைகள் சுழற்றி
வறண்ட நாவுடன்
ஆதிக்குளத்தில் குதிக்க அழைக்கிறாள்
கம்பீரக்கதவுகள் தாழிட
இயக்கம் தொடங்கி
தாளகதியில் சீராகிறது
வாளிப்பு முதுகை அணைத்து வருடும்
விரல்களில்படுகின்றன கசங்கிய பூவிதழ்கள்
சன்ன மூச்சில் விரவுகிறது
வெதுவெதுப்பு
மிதப்பின் அசைவுகளில்
வியர்வையரும்பி வழுக்க
உச்சத்தின் துடிப்பில்
மெல்ல மேலெழுந்து கீழிறங்குகிறது
உருண்டு திரண்ட பிருஷ்ட்டங்கள்
காமத்தின் ஆராதனையில்
ஒளிர்ந்தடங்குகிறது
விரகப்பெருஞ்சுடர்
சட்டென சாளரத்துள் நுழைந்த
பெருங்காற்றுக்குப் படபடக்கின்றன
களைந்த துணிகள்
தன் வயதின் மூப்பைச்சொல்லி
திடீரென அழுகிறாள்
இப்படியே செத்துவிடக்கூடாதாவெனக்கேட்டு.
- கவிஞர் ரவி சுப்ரமணியம்